தமிழ்நாடு பாஜகவினர் மீதான தாக்குதல்கள், பெட்ரோல் குண்டு வீச்சுகள் இன்னும் நிற்கவில்லை என்றும், சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு பாஜகவின் 4 எம் எல் ஏக்கள் தலைமையில் 4 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை விமான நிலையத்தில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:


பெட்ரோல் குண்டு வீச்சுகள் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டுள்ளன. நேற்று பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சார்பில் தமிழ்நாட்டின் டிஜிபியையும், உள்துறை செயலாளர் இருவரையும் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட பிரமுகர்களுடன் சந்திப்பு


நானும் அவர்களிடம் பேசினேன். இன்று கோவை, திருப்பூர் பகுதிகளில் இந்த குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கு நான் செல்ல உள்ளேன்.


அதேபோல் இன்று பாஜக 4 பேர் கொண்ட குழுக்களை உருவாக்கியுள்ளது . இந்தக் குழுக்களுக்கு 4 எம்எல்ஏக்கள் தலைவராக இருப்பர். வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், டாக்டர் சரஸ்வதி ஆகியோர் செயல்படுவர். இவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று சேதமதிப்பீடு செய்து கொடுக்கும் அறிக்கையை உள்துறை அமைச்சருக்கு அறிவிக்க உள்ளோம்.


முதலமைச்சரின் நடவடிக்கையில் திருப்தியில்லை


வன்முறையில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என டிஜிபி சொன்னதை வரவேற்கிறேன். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக நாங்கள் பல மாதங்களாகவே கூறிவருகிறோம்.


அனைவருக்குமான முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளார் நம் முதலமைச்சர். ஆனால் கடந்த மூன்று நாள்களாக அவரது நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை.


உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நான் தொலைபேசி வாயிலாக இது குறித்துப் பேசியிருக்கிறேன். தொண்டர்கள் யாரும் எதையும் கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். சொத்துகளின் சேதத்துக்கு ஈடுகட்ட கட்சி முயற்சி எடுக்கும், யாரும் அச்சப்பட வேண்டும்.


’தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்’


மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். தொண்டர்களின் அமைதி, எங்களுடைய பேச்சு என்பது ஒரு எல்லைக்கு தான். இது போன்று இன்னும் இரண்டு மூன்று நாள்களுக்கு தொடர்ந்து நடந்தால் எங்கள் தொண்டர்களின் கோபத்துக்கு மாநில அரசு ஆளாகக்கூடும் என நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


காவல்துறை தொடக்கத்தில் சுணக்கமாக இருந்தாலும், பத்திரிகை செய்திகளுக்குப் பிறகு போலீஸ் சுதாரித்துக் கொண்டது.
 
தமிழ்நாடு பாஜகவினர் மீதான தாக்குதல்கள், பெட்ரோல் குண்டு வீச்சுகள் இன்னும் நிற்கவில்லை. சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு பாஜகவின் 4 எம் எல் ஏக்கள் தலைமையில் 4 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


டிஜிபி அறிக்கை


கோவை உள்ளிட்ட இடங்களில் பாஜக, இந்து அமைப்பினர் உள்ளிட்டவர்களின் இடங்களில் பொட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கோவை விரைகிறார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக டிஜிபி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் இச்சோதனையின்போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


கைது செய்ய தனிப்படைகள்


அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது வரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நூறு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யட்டுள்ளன.


கோவை மாநகரில் RAF இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள். சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர், திரு.பி.தாமரைக்கண்ணன், இகாப, அங்கு முகாமிட்டுள்ளார்.


இச்சம்பவத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.