தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஃபெலோஷிப்புடன் கூடிய 3 மாத படிப்பிற்காக லண்டன் சென்றுவிட்டதால், அவருக்குப் பதிலாக, அப் பொறுப்புகளை கவனிக்க இடைக்கால பொறுப்புத் தலைவர் அல்லது பொறுப்பாளர் நியமிக்கப்படுவார் என்ற தகவல், வெறும் தகவலாகவே இன்னமும் நீடிக்கிறது. 


லண்டனில் அண்ணமலை:
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள சர்வதேச புகழ்ப்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் மற்றும் தலைமைத்துவம் தொடர்பான ஃபெல்லோஷிப்  எனும் உதவித்தொகையுடன் கூடிய 3 மாத சான்றிதழ் படிப்பிற்கான வாய்ப்பு, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கிடைத்துள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி, நவம்பர் 2-ம் வாரத்தில் முடிவடையும் சுமார் 70 நாட்கள் கொண்ட இந்த ஃபெல்லோஷிப் வாய்ப்பை பயன்படுத்த அண்ணாமலை முடிவு செய்து, டெல்லி தலைமையிடம் 3 மாதங்களுக்கு விடுப்பு கேட்டிருந்தார். 


யார் புதிய தலைவர்?
அவரது விடுப்பு கோரிக்கையை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டதுடன், தமிழக பாஜக-விற்கு புதிய தலைமையா அல்லது இடைக்கால பொறுப்பு தலைவரா என்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டது. தமிழிசை செளந்தர்ராஜன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட பலரிடம் இதுதொடர்பாக பல்வேறு கட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. 


தோல்வி எதிரொலியால் அண்ணாமலைக்குச் சிக்கலா?
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் இருந்து குறைந்தது 2 தொகுதிகளாவது வென்றுவிட வேண்டும் என்ற கணக்கில் பாஜக பெரும் முயற்சி எடுத்தது. மாநில தலைவர் அண்ணாமலையே நேரடியாக கோவை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், பாஜக-வின் வாக்கு சதவீதம் உயர்ந்ததே தவிர, போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால், அண்ணாமலை பாணி அதிரடி அரசியல் சரியான திசையில்  செல்கிறதா என்ற சந்தேகம் தலைமைக்கு வந்ததாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, உட்கட்சியில் இருந்தே மறைமுகமாக சில எதிர்ப்புகளும் அவருக்கு வந்ததையும் தலைமை பார்த்துக் கொண்டே இருந்தது. ஆனால், அண்ணாமலையின் அதிரடி அரசியல் மீது, பாஜக-வின் டெல்லி தலைமை தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருப்பதாகவே நமக்கு கிடைத்த தகவல்கள், தற்போது உறுதியாகச் சொல்கின்றன.


புதிய தலைவர் உண்டா? இல்லையா?
இதற்கிடையே, தற்போதைய தலைவர் அண்ணாமலை, சிறப்பு படிப்பிற்காக லண்டன் சென்றுவிட்டார். இந்தச் சூழலில்தான், தமிழக பாஜக-விற்கு புதிய தலைவரா அல்லது இடைக்கால பொறுப்புத் தலைவராக என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. தற்போது தமிழக பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளராக இருக்கும் கேசவ விநாயகத்தை இடைக்கால பொறுப்புத் தலைவராக, அதாவது 3 மாததத்திற்கு நியமிக்கலாமா என்ற தகவல் வைரலானது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. முக்கியநிர்வாகிகள் சிலரிடம் அண்ணாமலைக்கு எதிரான போக்கு தெரிந்தாலும், தொண்டர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு இருப்பதாகவே, டெல்லி தலைமை கருதுகிறதாம். மேலும், தற்போது புதிதாக யாராவது வந்தால், உட்கட்சி பூசல் வந்துவிடக்கூடாது என்றும்  டெல்லி தலைமை கருதுகிறது. அதுமட்டுமின்றி, அண்ணாமலை மீண்டும் தாயகம் வரும்போது, கட்சி நிலைமைகள் மாறிவிடக்கூடாது என்றும் பாஜக தலைமை எண்ணுகிறது. அதன் அடிப்படையில்தான், தற்போதயை நிலையே தொடரட்டும்.


தீவிரமாகப் போகும் தொண்டர் சேர்க்கை
அண்ணாமலை திரும்பி வரும் வரை அவரவர் பதவிகளை அவரவரே இருக்கட்டும். தீவிரமாக தொண்டர்கள் சேர்க்கையை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறட்டும் என்றும் மட்டும் கூறப்பட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி, மற்றொரு தகவலாக, வரும் 31-ம் தேதியுடன், தமிழக பாஜக-வில் அனைவரின் பதவிக்காலமும் முடிவடையப்போவதாகவும், எனவே, மீண்டும் தேர்தல் நடத்திதான் அனைவரும் தேர்வு செய்யப்படுவர் என்றொரு தகவலும் கசிந்துக் கொண்டிருக்கிறது.  ஆனால், இதுவரை, தலைமை மாற்றம், பொறுப்புத் தலைவர் உள்ளிட்ட எந்தவிதமாக கேள்விகளுக்கும் அதிகாரப்பூர்வமாக எந்தப் பதிலும் இல்லை என்பதால், தமிழக பாஜக-வில் தற்போதைய பதவிகளும் அவர்களின் அதிகாரங்களும் அப்படியே தொடர்கின்றன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாஜக-வின் தலைமையகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை இதை நிலைதான் என்பதுதான் யதார்த்தம். 


லண்டனில் இருந்து, கட்சி நிலைமைகளையும் அரசியல் நிலைகளையும் கூர்ந்து கவனித்து அண்ணாமலை வழிநடத்துவார் என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால், இன்னும் ஒரு வாரத்திற்குள் சில அதிரடிகள் அரங்கேறும் எனவும் சிலதகவல்கள் கசிவதால், பாஜக தரப்பில் இருந்து பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமிருக்காது என நம்புவோம்.