மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மூன்றாவது முறையாக வென்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. 


பரபரப்பாகும் தேர்தல் களம்:


கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்று பெறுவதற்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது.


ஆனால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான மன நிலை, பிகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உருவாகியுள்ள புதிய கூட்டணி ஆகியவை பாஜகவுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களிலும் மேற்குவங்கத்திலும் சரிகட்ட பாஜக முயற்சித்து வருகிறது.


குறிப்பாக, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் வெற்றிபெற பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மக்களவை தேர்தலின்போது வட மாநிலங்களில் தேர்தல் வியூகம் அமைப்பதில் வல்லவரான அமித் ஷா, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகிறார்.


தென் சென்னை தொகுதியை குறிவைக்கும் பாஜக:


அந்த வகையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை குறிவைத்து வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தலில், தென் சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட பாஜக மேலிடம் விரும்புவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


இதன் காரணமாகவே, வேலூரில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிகிறது. மற்ற தொகுதிகளை காட்டிலும் தென் சென்னை தொகுதியை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் பாஜக குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான், தென் சென்னை தொகுதி பாஜக தலைவர்களிடம் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.


கடந்த கால தேர்தலில், தென் சென்னை தொகுதியில் தனித்து போட்டியிட்ட பாஜக, 1 லட்சம் வாக்குகளை பெற்றது. எனவே, இங்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதும் கட்சி மேலிடம், தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள தென் சென்னை பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதேபோல, வேலூர் தொகுதியை குறிவைத்துள்ள பாஜக, அதற்கான வேலைகளையும் செய்ய தொடங்கிவிட்டது. 2019 ஆம் ஆண்டு வேலூரில் போட்டியிட்ட ஏசி சண்முகம் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கதிர் ஆனந்தை எதிர்த்துப் போட்டியிட்ட ஏசி சண்முகம், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.