8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 


8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பிக்கிடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 


மசோதாவிற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு 


மத்திய அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டமுன்முடிவாக எடுக்க கூடாது என்றும், இது தொழிலாளர்களுக்கு எதிரான சட்டமுன்முடிவு எனவும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார். 


தொழிலாளர்களுக்கு எதிரான இந்த சட்ட முன்முடிவை கடுமையாக எதிர்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினார் நாகை மாலி தெரிவித்தார். 


தொழிற்சாலைகளை பாதுகாக்கும் அதே நேரத்தில் தொழிலாளர் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 


சட்டமன்ற தேர்வு குழுவுக்கு சட்டமசோதாவை அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் வலியுறுத்தி உள்ளார். 


முதல்முறை ஒரு சட்ட மசோதாவிற்கு திமுக அரசிற்கு எதிராக இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.  இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு கொண்டு வந்ததற்காக இதைக் கொண்டு வரவில்லை என்றார்.


தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார். ஆனால் அரசியல் கட்சிகள் இதை ஏற்கவில்லை.


இந்த சட்டம் எல்லோருக்கும் பொருந்துமா?


குறிப்பிட்ட சில தொழிலுக்கு மட்டுமே இது பொருந்தும். எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். தன்னார்வ அடிப்படையில் 12 மணி நேரம் வேலை செய்வதாக கூறுவோருக்கு மட்டுமே சட்டம் பொருந்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன.


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


 திமுக தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்திருப்பதாக தெரிவித்தார். மே தின வரலாறே 8 மணி நேர வேலையை மையமாக வைத்து தான் வந்தது. இப்படி ஒரு சூழலில் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவை கொண்டு வந்ததை ஏற்க முடியாது என்றார். இது தொழிலாளர்களை வஞ்சிக்கும் போக்கு என்பது தெளிவாக தெரிவதாக கூறினார். இந்த சட்டத்தை கொண்டு வந்தால் எல்லா நிறுவனங்களும் அமல்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


இது ஒரு மோசமான சட்டம் என்றும் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஏன் இந்த சட்ட முன்வடிவை கொண்டு வர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த சட்டம் தமிழகத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவகம் செய்வதை போன்ற சூழலை காட்டுவதாக தெரிவித்தார். மே தினக் கொண்டாட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு என்றும், இப்படி ஒரு சூழலில் 12 மணி நேர சட்டத்தை ஏற்கவே முடியாது. இதுவன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.