தமிழகத்தில் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், புகை மூட்டத்தால் சாலைகளில் பயணிப்பவர்கள் அவதியடைந்துள்ளனர். 


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பொதுவாக பொங்கல் பண்டிகை அதற்கு முந்தைய நாளான போகி பண்டிகையில் இருந்து தொடங்குகிறது. பழையன கழிதலும்.. புதியன புகுதலும் என்ற கருத்துக்கு ஏற்ப போகிப் பண்டிகை சுத்தம் செய்யும் விழாவாக கொண்டாடப்படுகிறது. 


பொங்கலை வரவேற்கும் பொருட்டு வீடுகளை வெள்ளை அடித்து புதுப்பிப்போம். அதேசமயம் வீட்டில் பயன்படுத்தாத, பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பதால், நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கும் என்பது போகி பண்டிகையின் நம்பிக்கையாகும்.  






தமிழகத்தின் பல இடங்களில் போகிப்பண்டிகை இன்று உற்சாகமாக மேளம் அடித்து பழைய பொருட்களை எரித்து கொண்டாடப்பட்டது. ஆனால் சில இடங்களில் பிளாஸ்டிக், டயர்களை எரித்ததால் காற்று மாசுபாடு ஏற்பட்டது. 


மோசமான காற்றின் தரம் 


சென்னையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பல பொருட்களை எரிப்பந்தால் எழுந்த புகையால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் புகை சூழ்ந்தது. மேலும் காற்றின் தரமும் மோசமாடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மணலி, ஆலந்தூர், கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகை மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


ஆகவே தேவையற்ற பொருட்களை எரித்து காற்று மாசுபாட்டை உருவாக்க வேண்டாம் என மக்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.