வங்கக் கடலில் உருவாகியுள்ள அசானி புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


அசானி புயல் வலுபெற்று வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் நாளை மதியம் அல்லது மாலை வரை வடமேற்கு திசையில் பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


 


SCS Asani moved WNW with a speed of 25 kmph during past 06 hours and lay over WC and adjoining South BoB at 0530 hours IST. To move NWwards till 10th May and reach WC & adjoining NW BoB off North AP & Odisha coasts. To weaken gradually into a Cyclonic Storm in next 48 hrs. pic.twitter.com/fTlSP9LR4T


— India Meteorological Department (@Indiametdept) May 9, 2022


 


அடுத்த 24 மணி நேரத்தில் இந்தப் புயல் மேலும் வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் புயல் ஒடிசா, ஆந்திராவில் கரையைக் கடக்காது என்றும் கடற்கரையை ஒட்டியே நகர்ந்து சென்று வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணி நேரத்தில் அசானி புயல் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையானது புயலாக மாறி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி புயல் வங்கக்கடலின் தென்கிழக்கே மையம் கொண்டிருந்தது. அசானி புயல் கார் நிகோபாருக்கு வடமேற்கில் 450 கி.மீ தொலைவிலும் ஆந்திராவிலிருந்து தென்கிழக்கே 970 கி.மீ தொலைவிலும், , போர்ட் பிளேரில் இருந்து மேற்கே 380 கி.மீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் புரியிலிருந்து தெற்கு தென்கிழக்கே 1030 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


இந்தப் புயலால் இன்றைய தினம் காற்றின் வேகம் மணிக்கு 105 முதல் 115 கி.மீ என்றளவில் வீசக்கூடும். ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் செவ்வாய் கிழமை மாலை நேரத்தில் இருந்து மழை பெய்ய தொடங்கும்.  அன்றையதினம் ஒடிசாவின் கஜபதி,கஞ்சம், புரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.  புதன்கிழமையன்று ஒடிசாவின் ஜகத்சிங்பூர், புரி, குர்தா, கட்டாக், கஞ்சம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


மேற்குவங்கத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவில் செவ்வாய், புதன்கிழமைகளில் கனமழை பெய்யும். மூன்று மாநிலங்களிலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தனித்தனியே வானிலை எச்சரிக்கை தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டை பொறுத்தவரை  அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.






மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.