தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக பணியாற்றிய திருமலை உள்பட 4 அதிகாரிகள் தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவுப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பொறுப்பு வகித்து வருகிறார். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சுடலைக்கண்ணு கிரேடு 1 காவலராக நெல்லை மாவட்டம், திசையன்விளை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 17 காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 


இதையடுத்து, காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு காவல் துறையைச் சேர்ந்த 4 பேரை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.


நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை விவரம்:


மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் எந்த விதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்தது. போராட்டக்காரர்கள் விலங்குகள் அல்ல ஆனால் அவர்களிடம் காட்டில் வேட்டையாடுவது போல் சுடலை கண்ணு சூட்டிருக்கின்றார். சுடலைக்கண்ணு சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்து கொண்டிருந்த காரணத்தால் இவ்வாறு சுட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். 


போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
ஸ்ரெட்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். 


போராட்டக்காரர்கள் 5 பேர் தூத்துக்குடி மாவட்ட அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கலவரம் நடந்து கொண்டிருந்தபோது  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட எஸ்.பியும் ஊரில் இல்லை. 


பின்னணி:
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி, 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடந்து போராட்டம் நடந்த நிலையில் 100-வது நாளான 2018, மே 22 அன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர்.


அப்போது ஏற்பட்ட கலவரத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.  இந்த துப்பாக்கிச்சூடும், கலவரமும் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், அதிமுக அரசு, ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. 


2018 ஜூன் 4ம் தேதி விசாரணை ஆணையம் தன்னுடைய விசாரணையைத் தொடங்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த ஆண்டு மே 14ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த நிலையில், முழு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய நிலையில், 6 மாதம் கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு வழங்கியது. அதன்படி, கால அவகாசம் முடிவுற்ற நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த முழு அறிக்கையை கடந்த மே 18 ம் தேதி அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதலமைச்சரை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்பித்தார்.