தமிழகத்தில் காவிரி நதி பல்வேறு மாவட்டங்களை கடந்து வந்தாலும், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் முழுமையான பகுதி மற்றும் திருச்சி, அரியலுர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளும் காவிரி டெல்டா என்று அழைக்கப்படுகிறது.

  சுமார் 28 லட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களைக் கொண்டது. குறுவை, சம்பா ஆகிய பயிர்கள் தான் பிரதானமானவை. நெல் உட்பட 33 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் காவிரி டெல்டாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.


                                                               


சிறந்த மண் வளமும், நீர்வளமும் உள்ள காவிரி டெல்டாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விவசாயமே இப்பகுதி மக்களுக்கும், வணிகர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கிவருகிறது.  அதே நேரத்தில், மண் வளத்திற்கு கீழே உள்ள கனிம வளங்களும் கண்டறியப்பட்டு அவற்றை எடுப்பதற்கான சூழல்களும் உருவாக்கப்பட்டன.    குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான வேலைகள் கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் கச்சா எண்ணெயைப் போல் மற்றொரு வளமாகிய நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கக்கூடிய திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  நிலவளத்தையும், சுற்றுச் சூழலையும் பாதிக்கக்கூடிய இத்திட்டத்தின் எதிர்மறை அம்சங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறியது. 




மக்களுடைய எதிர்ப்புகளும், அச்சமும் அதிகரித்ததன் விளைவாக அன்றைய மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடையை விதித்தது மேலும் பல்வேறு வல்லுநர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவையும் அமைத்தது. அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் கடந்த 2013-ஆம் ஆண்டு தஞ்சை மற்றும் திருவாருர் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த நிரந்தரத் தடையும் விதிக்கப்பட்டது.  


கடந்த மார்ச் 2016-இல் மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை  HELP (Hydrocarbon Exploration Licensing Policy) அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன் மூலம் ஒற்றை அனுமதி என்கிற பெயரில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன்,  ஷேல், டைட் கேஸ் உள்ளிட்ட எந்த வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. ஃப்ராக்கிங் முறையில் இத்திட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்பதால் இப்பகுதி மக்களிடம் அச்சம் அதிகமான நிலையில் இதற்கு எதிரான போராட்டங்களும் வேகம்பெற்றன.




ஃப்ராக்கிங் என்பது படிமப் பாறைகளின் அடர்த்தி காரணமாக வெளியேற இயலாத எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை ஒருங்கிணைக்க நீர், வேதிப்பொருட்கள் மற்றும் மணல் சேர்த்த கலவைகளை அதிக அழுத்தத்தில் பூமிக்கு உள்ளே  செலுத்தி அவற்றை ஒருங்கிணைக்கச் செய்வதாகும்.  சுமார் 15 முதல் 20 கோடி லிட்டர் நீர் தேவைப்படும்.   இத்திட்டத்தில் ஃப்ராக்கிங் முடிந்த பிறகு உள்ளே செலுத்தப்பட்ட நீரில் 60%  வெளியே வரும்.  உள்ளே செலுத்தப்பட்ட  வேதிப்பொருட்களும் வெளியேறுவதால் காற்று, நீர், நிலம்  உள்ளிட்டவைகள்  மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ஃப்ராக்கிங்கிற்கு எதிரான குரல் ஏதோ காவிரி டெல்டா மக்களின் குரல் மட்டுமல்ல. பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் எரிவாய் எடுக்கும் அரபு நாடுகளைத் தவிர அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பெரும்பாலான நாடுகளில்  ஃப்ராக்கிங் எனப்படும் நீரியல் விரிசல் முறைக்கு எதிரான குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன.  அதன் எதிரொலியாகத்தான் காவிரி டெல்டா பகுதி மக்களின் குரலும்.


காவிரி டெல்டா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒலித்த ஒருமித்த குரல்களின் எதிரொலியாய் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த பிப்ரவரி 2020-ல் தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.


                                                                     


 


இந்த மசோதாவின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன. அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும் கடலூர் மாவட்டத்திலிருந்து காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களும் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வருகின்றன.


அந்த சட்டத்தின்படி..


இந்த மண்டலத்தில் அரசு புதிய பகுதிகளைச் சேர்க்கவோ, ஏற்கனவே உள்ள பகுதிகளை நீக்கவோ முடியும். இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் புதிய ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட நிலங்களை விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம். அதிக விளைச்சலைக் காணும் பொருட்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.வேளாண் தொழில்கள் தொடர்பான தொழிலகங்களை தொடங்க மட்டுமே அனுமதிக்கப்படும் என விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.மேலும், வேளாண் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விதிகள் அனுமதிக்கப்படும்.


ஆனால் டெல்டா பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள எண்ணெய் கிணறுகளில் புதிய ஹெல்ப் கொள்கை மூலம் எந்த வகையான எண்ணெய் எடுக்கும் பணிகளையும் நடைமுறைப் படுத்த வாய்ப்பு உள்ள சூழலில், அது பற்றி எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


மேலும் பிப்ரவரி 2020 ல் அறிவிக்கப் பட்டு ஓராண்டு முடிவடைந்த சூழலில், வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப் படவேண்டிய மாநில அளவிலான குழுவின் கூட்டத்தை கூட்டாததும், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப் படாததும் ஏமாற்றமாக உள்ளது. மே 2 க்கு பிறகு அமையவுள்ள புதிய அரசு மேற்கண்ட இரண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுடன், மாநில  மற்றும் மாவட்ட அளவிலான குழுக்களில் கூடுதல் எண்ணிக்கையிலான விவசாய மற்றும் விவசாய தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். மேலும் அரியலுர், கடலுர் மாவட்டங்களில் விடுப்பட்ட பகுதிகளை இணைப்பது உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.


காவிரி டெல்டா பகுதியின் நில மற்றும் நீர் வளத்தை மேம்படுத்த நடவடிக்கைகள், உற்பத்தியாகும் வேளாண் பொருட்களை கொண்டு மதிப்பு கூட்டப் பட்ட பொருட்களை தயாரிக்கும், சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகளை அமைப்பது, புதிய வேளாண் பொருட்கள் மற்றும் நவீன வேளாண் கருவிகள் குறித்த ஆய்வு மற்றும் உற்பத்தி மையங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், காவிரிடெல்டாவை முழுமையான பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக மாற்றி,  மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு  உணவு உற்பத்தி மையமாக நிலை நிறுத்த முடியும்.


- வ. சேதுராமன்


மாநிலக் கருத்தாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்