" வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் "

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 23 - ம் தேதி ஆசிரியை ஒருவர் 8 - ம் வகுப்பு மாணவிகளுக்கு 'குட் டச், பேட் டச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அப்போது யாராவது நம்மை தொட்டால் அச்சமின்றி பெற்றோரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ தெரிவித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என கூறி விட்டு, உங்களில் யாருக்காவது இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் என்னிடம் தனியாக வந்து தெரிவிக்க வேண்டும் என ஆசிரியை கூறி உள்ளார்.

Continues below advertisement

சிறிது நேரத்தில் 8 - ம் வகுப்பு மாணவிகளில் ஒருவர் ஆசிரியையிடம் சென்று, 'நான் கடந்த 2021 - ம் ஆண்டு , அதே பள்ளியில் 3 - ம் வகுப்பு படித்த போது (8 வயது), பள்ளி வளாகம் அருகே எனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அப்போது, அங்கு வந்தவர் எனது கையை பிடித்து அவரது வீட்டிற்கு இழுத்துச் சென்று ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்தார். ஒரு கட்டத்தில் நான் கதறி அழுத போது, யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி அனுப்பினார்.

Continues below advertisement

 

நான் பயத்தில் இதுவரை யாரிடமும் சொல்லாமல் இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் தவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை உடனடியாக சிறுமியின் தாயை அழைத்து இந்த விஷயத்தை கூறி உள்ளார்.

இதனால் மாணவியின் தாய் கதறி அழுதார். பின்னர் ஆசிரியையின் அறிவுறுத்தலின்படி மாணவியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் மாணவியிடம் அந்த நபரை காட்டும்படி கூறினர். இதில் மாணவியை பலாத்காரம் செய்தது ஆரணி டவுன் கொசப்பாளையம் முனுசாமி தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன் ( வயது 42 ) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஐயப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.