தனது 43வது அவதார நாள் விழா குறித்து செய்தி வெளியிட்ட ஊடகத்திற்கு அன்னப்பூரணி அம்மா நன்றி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள ராஜாதோப்பு பகுதியில் காஞ்சிபுரம் பகுதியை சார்ந்த அன்னப்பூரணி அம்மா என்பவரின் ஆசிரமம் அமைந்துள்ளது. அங்கு கடந்த ஜூன் 22 ஆம் தேதி தனது 43-வது அவதார திருநாளையொட்டி அன்னபூரணி பக்தர்களை சந்தித்து ஆசி வழங்கினார். அப்போது பக்தர்கள் அன்னபூரணிக்கு மலர்களால் பூஜித்தும் பாத பூஜை செய்தும் வழிபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கு ஆசிரமம் அமைத்ததற்கு காரணம் மக்கள் அனைவருக்கும் முக்தி நிலை கொடுத்தும், அவர்களை கொண்டாட்டமாக வாழவைப்பதற்காக தான் என கூறினார். மேலும் மக்கள் தன்னை முழுமையாக என்னிடம் ஒப்படைத்து விட்டு சரணடைகிறார்களோ அவர்களுக்கான என்ன நோயாக இருந்தாலும், எந்தவித பிரச்சினையாக, இருந்தாலும் நான் சரிசெய்வேன் என அன்னபூரணி தெரிவித்தார். என்னை நம்பி வந்தவர்கள் தங்களின் வாழ்வில் உள்ள இன்னல்களில் இருந்து விடுபட்டு நலமுடன் உள்ளனர் என்றும், தன்னை உணர்ந்து தன்னிடம் தீட்சை பெற்றவர்கள் பல துன்பங்களில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நான் சொன்னதை அப்படியே ஒளிபரப்பிய ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார். மேலும் ஊடகத்துறை என்பது சாதாரண துறை அல்ல. இந்த துறை உண்மை தன்மையுடன் செயல்படும் போது இந்த பிரபஞ்சம் மாற்றம் பெறும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட்ட யூ-ட்யூப் நிறுவனங்களை அவர் கடுமையாக விமர்சித்தார். தனக்கும் அரசுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிவித்த அன்னபூரணி, என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?. இப்படி செய்வதால் இயற்கை நிகழ்த்தும் கர்மாவில் இருந்து நீங்கள் யாரும் தப்பிக்கவே முடியாது எனவும் அவர் கூறினார். நானும் அரசும் எதற்காக வந்தோமோ அந்த வேலை முடியும் வரை எங்கள் பணியை சிறப்பாக நடத்தி கொண்டிருப்போம் என அன்னபூரணி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்