கரூர்  வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முதல் குற்றவாளி கரூர் மேயர். மூன்று மாதத்தில் அவர் சிறைக்கு செல்வது உறுதி.


அமைச்சர் எ.வ.வேலு அரசியலில் வருவதற்கு முன்பு என்ன செய்தார்? பூஜ்ஜியமாக இருந்த அவரின் தற்போதைய நிலை என்ன?


நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களிடம் அமர்ந்து நீட் தேர்வு என்றால் என்ன என்று உதயநிதி ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.




கரூர் தொகுதிக்குட்பட்ட திருமாநிலையூரில் இருந்து தாந்தோணிமலை பெருமாள் கோவில் ஆர்ச் வரை சுமார் 3 கி.மீ தூரம் வரை "என் மண் - என் மக்கள்" நடைபயண பாதயாத்திரை நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அவருடன் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தாந்தோணிமலையில் திறந்த வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை உரையாற்றினார். அதில், “கரூர் மாநகராட்சி மேயர் தன்னை ஒரு ஜனாதிபதி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். அவர் செய்யும் தவறை, நாமும் செய்யக்கூடாது.


 




கரூர் மாவட்டம் தொடர்ந்து பின்னோக்கி செல்கிறது.  கரூரில் திமுகவினர் நீட்டுக்கு எதிராக போஸ்டர் ஓட்டுகின்றனர். திமுக எம்எல்ஏக்கள் தமிழகம் முழுவதும் பள்ளி குழந்தைகளை பேருந்துகளில் ஏற்றி சென்று, நீட்டிக்கு எதிராக கையெழுத்து போட வைக்கிறார்கள்.  நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களிடம் அமர்ந்து நீட் தேர்வு என்றால் என்ன என்று உதயநிதி ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.  எ.வ.வேலு அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன வேலை செய்தார். பூஜ்ஜியமாக இருந்த அவர் திமுக ஆட்சி அமைத்த 30 மாதத்தில் இரண்டு மருத்துவக் கல்லூரிகளை திறந்தார். திறப்பு விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார்.  கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய முதல் குற்றவாளி கரூர் மாநகராட்சி மேயர். செந்தில்பாலாஜியை விட கரூர் மேயர் பெரிய ஆள் கிடையாது. வருமான வரித்துறை வழக்கில் சி.பி.ஐ விசாரணை உள்ளது. இன்னும் 3 மாதத்தில் மேயர் சிறைக்கு செல்வது உறுதி. வெளியில் இருக்கும் வரை பாஜக  பிளக்ஸ் பேனர்களை அகற்றிக் கொண்டு கொஞ்சம் சந்தோசமாக இருக்கட்டும்.


 




 


கரூரில் மது போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கரூர் எம்.பி ஜோதிமணி வேடந்தாங்கல் பறவைகள் போல, பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதால் திடீரென்று சென்று மக்களை சந்தித்து போட்டோ சூட் நடத்துகிறார். 5 ஆண்டுகளில் கரூர் தொகுதிக்கு என்ன செய்தார் என்று ஜோதிமணி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.  தமிழகத்தில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அருவாள் வெட்டு நடக்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, பாஜக கொடிக்கம்பத்தை அகற்றுகிறார்கள். திமுக ஆட்சியில் காவல்துறையை பார்த்தால் பரிதாபம் வருகிறது.  துரைமுருகன் உட்பட திமுக அமைச்சர்கள் அனைவரும் அடுத்து தன் மீது ரெய்டு வந்துவிடக்கூடாது என்று, கோவில் கோவிலாக செல்கிறார்கள். திமுக அமைச்சர்கள் 35 பேரில் பாதி பேர் ஊழல் வாதியாக உள்ளனர்.  பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பி-க்களுடன் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சியில் அமருவது உறுதி. இவ்வாறு பேசினார்.