Annamalai: பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


பால் விலை உயர்வு


தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விற்பனை விலையை ரூ.12 அதிகரித்து அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே லிட்டருக்கு 48 ரூபாயாக இருந்த ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை 12 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த விலை மாற்றம் நாளை முதல் ( நவம்பர் 5) அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். 


அமைச்சர் நாசர் விளக்கம்


இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பால் கொள்முதல் விலையை முதமைச்சர் ஸ்டாலின் உயர்த்தியுள்ளார். இதன் காரணமாக பால் விற்பனை  விலை உயர்வு சாதாரண மக்களுக்கு எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது முழுக்க முழுக்க ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை மட்டுமே மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது" என தெரிவித்திருந்தார்.


மேலும் அவர் கூறியதாவது, ”கொழுப்பு நிறைந்த ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் மாதாந்திர அட்டை தாரர்களுக்கு 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மாதாந்திர அட்டை தாரர்களுக்கு விலை உயர்வு இல்லை. வணிக ரீதியாக  வாங்கப்படுவதில் தான் 60 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.


"பாஜக ஆளும் மாநிலங்களை விட குறைவு"


பிறகு, அவர் கூறியதாவது ”தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் கொழுப்பு நிறைந்த பால் லிட்டருக்கு 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரூபாய் 48க்கு தான் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒன்றிய அரசு பாலுக்கு  ஜிஎஸ்டி வரி விதித்ததாகவும் வரலாற்றில் இல்லாத நிகழ்வை ஒன்றிய அரசு செய்தது" எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார்.


அண்ணாமலை விமர்சனம்


இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்ததாவது, ” பாலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் எனவும் இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது என தெரிவித்துள்ளார்.






மேலும் அவர் தெரிவித்ததாவது, பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.