கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட அங்கன்வாடி மையங்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 


வழிகாட்டு நெறிமுறைகள்:



  • செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க வேண்டும்.

  • 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சத்துணவு மட்டும் காலை 11:30 - 12:30க்குள் தர வேண்டும்

  • காலாவதியான, தரமற்ற பொருட்களை சத்துணவுக்கான சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது

  • அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நெயில் பாலிஷ், செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக்கூடாது

  • அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

  • மூக்கு சொறிதல், தலை கோதுதல், கண்கள், காது, வாயினை தேய்த்தல், எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும்

  • 2 முதல் 6 வயதுக்குட்பட்ட அங்கன்வாடி மைய குழந்தைகள் மாஸ்க் அணிய கட்டாயமில்லை.




இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 


சூடான சத்துணவு சமைத்து பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 01-09-2021 அங்கன்வாடி மையங்களை திறப்பதற்கும், மாவட்ட தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதையும், சமூக இடைவெளியை குழந்தைகள் அங்கன்வாடி தனியே வெளியிடப்படும் என்றும் மேற்கண்டுள்ள அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. 01-09-2021 முதல் அங்கன்வாடி மையங்களை திறந்து 2 முதல் 6 வயது வரையிலான பயனாளிகளுக்கு சூடான சத்துணவு சமைத்து வழங்கும்பொழுது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுகிறது. இவ்வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது பின்பற்றுவதை மாவட்ட ஆட்சித் தலைவர்களும்/ ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் அவர்களும் உறுதி செய்யுமாறும் ஆணையிடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது. 


முன்னதாக கல்லூரி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு இருந்தது. கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்றும்,மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டிருந்தது




கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெற வேண்டும். அரசு அளிக்கும் இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு ஏற்கெனவே பொதுவான நெறிமுறைகளை குறிப்பிட்டுள்ளது.