தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் விதித்தது, இந்தநிலையில் இன்று மேலும்  3 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி தண்டம் விதித்துள்ளது. இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


தமிழக மீனவர்கள்12 பேருக்கு தலா ரூ.3.50 கோடி அபராதம் 


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,


வங்கக்கடலில் மீன்பிடித்துக்  கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த ஆகஸ்ட் 27-ஆம் நாள் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரில், மூவர்  ஏற்கனவே ஒருமுறை கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறி அவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்து  இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி தண்டம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும், மீண்டும் தண்டம் விதிப்பது கண்டிக்கத்தக்கது.


வங்கக்கடலில் மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை 6 மாதங்கள், ஓராண்டு என சிறையில் அடைப்பது, கோடிக்கணக்கில் தண்டம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அண்மைக்காலமாக இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே  பலமுறை நான் குறிப்பிட்டதைப் போல இது தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் நடவடிக்கை தான். இதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதற்காக கடந்த காலங்களிலும் இத்தகைய உத்திகளை இலங்கை பயன்படுத்தியிருக்கிறது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பவர்களுக்கு ரூ.25 கோடி தண்டம் விதிக்கும் சட்டத்துக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


அப்போது தமிழகத்தில் இருந்து எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக அந்த முடிவை இலங்கை அரசு திரும்பப் பெற்றது. பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி  இப்போது சிறை தண்டனை மற்றும் அபராதத்தை விதிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை பன்னாட்டு விதிகளுக்கு எதிரானது. ஒரு மீனவர் தொடர்ந்து ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டால் அவர்களின் குடும்பம் பொருளாதார அடிப்படையில் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்?  மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவர்களால் ரூ. 1 கோடி அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பதை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும்.


மத்திய அரசு நடவடிக்கை தேவை


வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு எந்த வகையிலும் தண்டனை விதிக்க முடியாது என்பது தான் எதார்த்தம் ஆகும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.


நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே இலங்கை அரசு இவ்வாறு செய்கிறது. இலங்கை அரசின் இந்த அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக்கூடாது. தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத்  தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.