காவிரி ஆற்றில் கடந்த 6 மாத காலமாக கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முற்றுலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்தது. மேலும் மேலும் கடுமையான வெப்பம் வீசி வந்ததால், காவேரி ஆற்றில் நீர்வரத்தின்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது.




இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பொழிய தொடங்கியது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து நான்கு மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 200 கன அடியில் இருந்து, வினாடிக்கு 3000 கன அடி வரை உயர்ந்தது. மேலும் மழை குறைவதும் அதிகரிக்கும் ஆக இருந்து வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1500 கன அடி எனவும், 1000 கன அடி என அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. 



இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று அதிகரித்து வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாக வறண்டு கிடந்த இடங்களில் தற்பொழுது தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஒகேனக்கல் மெயினருவி, சினியருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டி, பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் தொடர்ந்து கன மழை பொழிய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதே போல் சுற்றுலாவை நம்பி உள்ள சுற்றுலா தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது