தனக்கு கடிதம் எழுதி பாராட்டு தெரிவித்த ஆட்டோ ட்ரைவருக்கு போன் செய்து முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்த ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது


கடந்த வாரங்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி வேலூர் மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் சென்னை திரும்பி வழக்கமான பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில் வேலூரில் இருந்து முக ஸ்டாலினுக்கு  கடிதம் ஒன்று வந்தது. வேலூர் செண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் அந்தக்கடிதத்தை முதல்வருக்கு எழுதியுள்ளார். அந்தக்கடித்தத்தில், ''முதல்வர் அவர்களே, நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதட்தில் ஆட்சி செய்வேன் என்று தெரிவித்தீர்கள். அந்த வகையில் உங்களின் சிறப்பான ஆட்சிக்கு உங்களுக்கு வாக்களிக்காத எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இந்த பன்னீர்செல்வத்தின் வாழ்த்துகள்.




நீங்கள் வேலூர் வந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறும் இல்லாமல் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம்.  எங்கள் தொழில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. நீங்கள் வந்துபோனதற்கான எந்த அறிகுறியும் எங்களுக்கு தெரியவில்லை. இவை அனைத்தும் உங்களின் உத்தரவின்பேரில்தான் நடந்திருக்கும் என்பதை அறிவேன். மேலும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி தமிழ்நாட்டை முன்னேற்றுவீர்கள் என எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. வாழ்த்துகள்'' என குறிப்பிட்டு இருந்தார். கடிதத்தோடு கலைஞரும் எம்ஜிஆரும், எம்ஜிஆர் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பி இருந்தார். இந்த கடித்தத்தை படித்த முதல்வர் ஸ்டாலின் ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி நன்றி தெரிவித்தார். 


அந்த போன் உரையாடலில் பேசிய  முதல்வர் ஸ்டாலின்,


'’நான்,  முகஸ்டாலின் பேசுகிறேன். உங்க கடிதத்தை படிச்சேன். நீங்க புரட்சிதலைவர் ரசிகர்னு சொல்லி இருக்கீங்க. நானும் எம்ஜிஆர் ரசிகன் தான். எனக்கு பாராட்டு சொல்லி இருக்கீங்க. அந்த பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கத்தான் போன்போட்டேன்’’ என்றார்.


முதல்வரின் போனை சற்றும் எதிர்பாராத ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் ஆச்சரியத்தில் திக்குமுக்காடினார். ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்த பன்னீர்செல்வம், ’’ரொம்ப நன்றிங்கண்ணா. நீங்களே லைன்ல வந்தது ரொம்ப சந்தோஷம். உங்க கைக்கு லெட்டர் கிடைக்காதுன்னு நினைச்சுட்டேன்’’ என்றார்.




அதற்கு பதில் சொன்ன ஸ்டாலின், ’’அதெப்படி லெட்டர் கிடைக்காம போகும். கரெக்டா கைக்கு வந்து சேர்ந்துடுச்சி’’ என்றார். மேலும் பன்னீர்செல்வத்தின் தொழில் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். இந்த ஆடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.