தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பு ஏ.கே. அகர்வால் மற்றும் கூடுதல் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா ஆகியோர் வியாழக்கிழமை அன்று இணையதள வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய பட்ஜெட்டில்  தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பேசினர். தெற்கு ரயில்வே பாதுகாப்பு பணிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட அதிக அளவாக ரூபாய் 2374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்கு ரூபாய் 1470 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 89.51 சதவீதம் அதிகமாகும் என்றனர்.








 

 


 






மேலும் கட்டமைப்பு பணிகளான  இரட்டை ரயில் பாதை மற்றும் அகல ரயில் பாதை திட்டங்களுக்கு முறையே 283 மற்றும் 73 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும்  ரூபாய் 28,307 கோடி மதிப்பிலான 25 ரயில்வே திட்டங்களுக்கு  அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக என்றனர்.  இந்த நிதி 3077 கிமீ ரயில்பாதை திட்டங்களை செயல்படுத்த  பயன்படுத்தப்படும். இந்தப் பணிகளுக்காக இந்த நிதியாண்டில் ரூபாய் 3865 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதியை விட 340 சதவீதம் அதிகமாகும் என்றனர்.



 

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.2 கிமீ தூரத்திற்கு அமைக்கப்படவிருக்கும் புதிய ரயில் பாதை பணிக்கு  ரூபாய் 59 கோடியும் மதுரை - போடிநாயக்கனுர் அகல ரயில்பாதை திட்டப் பணிக்கு ரூபாய் 125 கோடியும், புதிய நவீன பாம்பன் பாலப் பணிக்கு ரூபாய் 50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர். ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்  மூலமாக நடைபெற்று வரும் ரயில் பாதை பணி களுக்கு ரூபாய் 789 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர். தமிழகத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை மின்சார மயமாக்கல் பணிகளுக்கு ரூபாய் 303.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.