அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்தெடுக்கப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 


எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட பின்னர்  செய்தியாளர் சந்திப்பில் நத்தம் விஸ்வநாதம் பேசியதாவது: 


அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும். ஒற்றை தலைமையின் கீழ் கட்சி செயல்படும். பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 11- ஆம் தேதி நடைபெறும். பொதுக்குழு கூட்டம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். ஏற்கனவே முடிவெடுக்கப்படுள்ள 23 தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்கள் தவிர மற்றவைகள் நிறைவேற்றப்படும். பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.


அதிமுவில் எடப்பாடி பழனிசாமிக்கு 99 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் 1 சதவீதம் மட்டுமே ஆதரவு கிடைத்துள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியே தற்போது இல்லை. வைத்தியலிங்கத்திற்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை.


கடந்த கடந்த 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக தெரிவித்தனர். இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். 


பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக இருதரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 27 ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டம் தன்னுடைய ஒப்புதலின்றி நடப்பதாக ஓபிஎஸ் கூற, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூட்டம் நடந்தது. தொடர்ந்து  எடப்பாடி பழனிசாமி கழக தலைமை நிலையச் செயலாளர் என்ற பெயரில் அறிக்கை வெளியிட தொடங்கியது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 




தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர்களுக்கான ஏ மற்றும் பி படிவத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கையெழுத்து போட வேண்டும். கையெழுத்து போட நான் தயார் என ஓபிஎஸ் அறிக்கை விட எடப்பாடி பழனிசாமியோ ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே இல்லை. கடைசி நாளில் இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என பதிலறிக்கை விட்டு அதிர வைத்தார். இதனிடையே ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழுவை கூட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். 


பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்தலாமா எனவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண