மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடக்கும் அதிமுக மாநில மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டது. இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இலச்சினையை வெளியிட்டார். 


அதனை தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவில் இனி வெற்றிடம் இல்லை. தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். ஒன்றரை மாதத்தில் அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். 


அதிமுக பல்வேறு பிரிவுகளாக உடைந்துவிட்டது என பலரும் விமர்சனம் செய்தனர். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் சில கண்ட கனவுதான் தற்போது உடைந்துவிட்டது. ஆகஸ்ட்டுல் நடக்கும் அதிமுக மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடிதளமாக அமையும்.”என தெரிவித்தார். 




மேகதாது விவகாரம் - கர்நாடக காங்கிரஸ் புது நாடகம்:


தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம். அமைதியாக உள்ள மாநிலத்தை சீர் குலைக்கும் நோக்கில் டி.கே. சிவக்குமார் செயல்படுகிறார். விவசாயிகளுக்கு உரிய நீரை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்.”என குறிப்பிட்டார்.