மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த குற்றத்தில் தொடர்புடையதாக இதுவரை மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு காவல்துறை குறித்து எந்த பயமும் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன பதிவில், ”செந்தில் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. செந்தில் அவர்கள் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

Continues below advertisement

குற்றவாளிகளுக்கு பயமே இல்லை - இபிஎஸ்

நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்- இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை. இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வக்கில்லாத ஒரு கையாலாகாத பொம்மை முதல்வர் திமுக ஆட்சி இங்கு நடப்பதால் தானே ? தனது ஆட்சியில், ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை? இதற்கு உள்ளபடியே திரு. ஸ்டாலின் தலைகுனிய வேண்டும் உயிரிழந்த திரு. செந்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ,

மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

திரு.செந்தில் அவர்களைப் படுகொலை செய்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். நான் மீண்டும் சொல்கிறேன்- தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் படி இந்த விடியா திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஆகும்!