அதிமுக முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் கடந்த 2016-21 வரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை அடுத்து கடந்த 2022 ஜனவரி 18ஆம் தேதி கேபி அன்பழகன் தொடர்புடைய வீடு, அலுவலகம் உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தினார். இந்த சோதனையில் கணக்கில் வராத 11 கோடி பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய விசாரணையில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்தது. இந்த புகார் தொடர்பான வழக்கில் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகியான தனபால் சரவணகுமார் மற்றும் உறவினர்கள் என 11 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்து கடந்த மே மாதம் 22-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேதியாக ஜூலை 13-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.



 

இந்நிலையில், இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இனி முதன்மை அமர்வு நீதிமன்றம் மூலம் சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை நடைமுறைகள் தொடங்கப்படும் என நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவித்திருந்தனர். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் முறையாக சம்மன் அனுப்பப்பட்டு, வழக்கின் விசாரணை இன்று முதல் தொடங்கப்பட்டது. மேலும் வழக்கின் முதல் தாள் தொடக்க விசாரணை என்பதால், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்ட 11 பேர் இன்று காலை தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற நவம்பர் 22ஆம் தேதி மாற்றி, கேபி அன்பழகன் மற்றும் தொடர்புடைய 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் நீதிபதி உத்திரவிட்டார். அப்பொழுது அவர்களுக்கு இந்த வழக்கு குறித்த குற்ற பத்திரிக்கை வழங்கப்பட உள்ளது.