தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனும் கர்த்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மக்களை வாட்டி வதைத்தது. ஆனால் இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது. இனியாவது வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக தான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதிகபட்ச வெப்பநிலை:


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து பாளையங்கோட்டையில் – 40.2 டிகிரி செல்சியஸ், சென்னை மீனம்பாக்கத்தில் – 40.2 டிகிரி செல்சியஸ், நாகையில் – 39.3 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் – 39 டிகிரி செல்சியஸ், கடலூரில் – 39 டிகிரி செல்சியஸ், வேலூரில் – 39.6 டிகிரி செல்சியஸ், மதுரையில் – 38.6 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் – 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.


இப்படி வெயிலில் கொளுத்தும் நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது.


29.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


31.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


01.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிகபட்ச வெப்பநிலை:


இன்றும் நாளையும்: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். இதனால் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.