கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜன.05ஆம் தேதி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி “தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.


தமிழகம் என்று சொல்லலமா...?


இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடங்கி நெட்டிசன்கள் வரை அனைத்து தரப்பினரும்  கண்டனங்கள் தெரிவித்து வந்த நிலையில், முன்னதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்  குஷ்பு தமிழகம் என அழைப்பதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார்.


”தமிழகம் என்றும் அழைக்கலாம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம். அது தவறில்லை. மேடைக்கு ஏற்றபடி மாறும். சோறு என்றும் சொல்வோம், சாப்பாடு என்றும் சொல்வோம், அது இருக்கும் இடத்தைப் பொறுத்தது. எப்படி அழைத்தாலும் தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் தான்; மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி தான்” என குஷ்பு பேட்டி அளித்துள்ளார்.


முன்னதாக ஆளுநரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு என்ற பெயரை ஆதரிக்கும் வகையில், ’தமிழ்நாடு வாழ்க’ என இந்தி, மலையாளம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் பதிவிட்டிருந்தார்.


மதவாத அரசியல்:


தமிழ்நாடு எனும் ஹாஷ்டேக் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு விருந்து அளித்துப் பேசிய கமல்ஹாசன், ”பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மத அரசியலை எதிர்ப்பதற்காகவே காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்றோம். மதத்துக்கு எதிரான இந்த அரசியலை தடுக்க வேண்டும்.


எந்தக் கட்சியாக இருந்தாலும் மதத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. அண்ணா என்பது வெறும் பெயர் அல்ல. ஒரு உறவு. நம் நலன் சார்ந்து யார் பேசுகிறார்களோ அவர்கள் பின் தான் மக்கள் செல்வார்கள். அந்த நலன்களைத்தான் நான் தேடுகிறேன். இந்தியா சிதைந்து விடக்கூடாது என்பதற்காகவே பாரத் ஜோடா யாத்திரை நடைபெறுகிறது.


கமல் கேள்வி:


பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது. இதனை மாற்ற சொல்லுவதற்கு  ஆளுநர் யார்? அவருடைய பெயரை ரவி என்பதற்கு பதில் புவி என மாற்றச்சொன்னால் மாற்றிக்கொள்வாரா? மதத்தை அரசியலின் கருவியாக பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்களுடைய அரசியல் என்பது மதத்துக்கானது. மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மக்களுக்கானது” எனப் பேசியிருந்தார்.


இதையும் படிங்க: ’ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்’ - அமைச்சர் சக்கரபாணி


Jallikattu: 2023ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் கோலாகலமாக தொடக்கம்! பரிசுகளை அள்ளும் மாடுகளும், வீரர்களும்!