நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதிக்கான நுழைவு வரியில் விலக்கு கேட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பு எதிராக அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


முன்னதாக, நடிகர் விஜய் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, காருக்கு உரிய நுழைவு வரி செலுத்தும்படி விஜய்க்கு வணிக வரி துறை உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, வரி விலக்கு கோரி நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு விசாரணையின் போது, விஜய் சார்பாக இந்த வழக்கை அவரின் வழக்கறிஞர் தொடர்ந்திருந்தார். ஆனால், தாக்கல் செய்த மனுவில், ஜோசப் விஜய் என்று மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. யார் இந்த ஜோசப் விஜய்? அவர் என்ன தொழில் செய்கிறார்? என்ற எந்த விபரமும் அதில் குறிப்பிடவில்லை. யார் அந்த விஜய் என்று நீதிபதி கேட்ட பிறகே, அவர் நடிகர் விஜய் என்று வழக்கறிஞர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பிரபல நடிகராக இருக்கும் விஜய், படங்களில் சமூக கருத்துக்களை கூறும் அவர், தனது தொழிலைக் கூட குறிப்பிடாமல் வழக்கை தொடர்ந்தாரா என்று நீதிபதி கடிந்து கொண்டார். ஏன் இதை மறைக்க வேண்டும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.




மேலும், புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி எஸ்.எஸ். சுப்ரமணியம், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு ஆகும். மக்கள் செலுத்தும் வரிதான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினார். சமூக நீதிக்கு பாடுவதாக திரையில் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரிஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் நீதிபதி அதிருப்தியுடன் கூறினார்.


நடிகர் விஜய்யை பின்தொடரும் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ரோல்மாடலாக இருக்கும் விஜய், அரசாங்கம் விதிக்கும் வரியை கடமை தவறாமல் கட்ட வேண்டும் என்ற நோக்கில் நீதிபதி இந்த வழக்கில் கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.


விஜய் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்து வருவது சமீபகாலமாக நடைபெற்றது. அப்போதெல்லாம், அவர் எதுவும் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று தெரியவந்தது. ஆனால், பல கோடிகள் சம்பாதிக்கும் விஜய், காருக்கு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்து, தேவையில்லாத சர்ச்சையில் சிக்கிக்கொண்டதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த அபராதத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தான் விஜய் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,