Superstar Rajinikanth: உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த 30ம் தேதி, சென்னை அப்பலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.


நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்:


உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த 30ம் தேதி அன்று இரவு திடீரென ரஜினிகாந்த், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் வெளியானதுமே திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருப்பினும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சிகிச்சை பெறுவதற்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி, நடிகர் விஜய் வரையிலான பலரும், விரைவில் ரஜினி நலம்பெற வேண்டும் என வாழ்த்தினர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு 11 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


இளையராஜா டிவீட்:


நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கோயில்களிலும் அவரது ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அவர்களது வேண்டுதலுக்கு பலனிக்கும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக” என குறிப்பிட்டு இருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படாத வண்ணம், நேற்று இரவே அவர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.


ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?


இதயத்துக்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாகவும், ரத்த நாள வீக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐசியு பிரிவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டு, அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சுமார் 3 மாதங்கள் வரை அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்தடுத்து தயாராகும் ரஜினி படங்கள்:


த. செ. ஞானவேல் இயக்கத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்டாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம், வரும் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசர் மற்றும் மனசிலாயோ போன்ற பாடல்கள் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. தொடர்ந்து, அண்மையில் வேட்டையன் படத்தின் டிரெய்லரும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.