தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


22.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை   பெய்யக்கூடும். சேலம், நாமக்கல்,  கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


23.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


24.08.2023 முதல் 28.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான  வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


ஐஸ் ஹவுஸ் (சென்னை) 4, வந்தவாசி (திருவண்ணாமலை) 3, தலைவாசல் (சேலம்), பவானி (ஈரோடு), TVK நகர் (சென்னை), செங்கல்பட்டு தலா 2, எருமப்பட்டி (நாமக்கல்), திருவையாறு (தஞ்சாவூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), விருதுநகர், மணலி (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மேட்டுப்பட்டி (மதுரை), மங்களபுரம் (நாமக்கல்), சந்தியூர் KVK (சேலம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டர் மழை உள்ளது. இது இயல்பை விட 6  சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 


மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தாலும் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து கரூரில் 39 டிகிரி செல்சியஸ், மதுரை 39.2 டிகிரி செல்சியஸ், ஈரோடு 39 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் 38 டிகிரி செல்சியஸ், திருச்சி 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இருப்பினும் இன்று காலை முதல் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது .