தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


08.09.2023 முதல் 12.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவு எதுவும் இல்லை என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் எதுவும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில்  இன்று காலை 8 மணிவரை மூடு பணி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 


இதனால் நேற்று, கடுமையான பனிமூட்டம் காரணமாக பெங்களூரு, மும்பையிலிருந்து சென்னை வந்த 2 விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. இதேபோன்று பல்வேறு விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறக்க முடியாமல் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டது. மேலும்  ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளது.


மேலும் மும்பை, பெங்களூரூ, ஐதராபாத், கொழும்பில் இருந்து வந்த 4 விமானங்களும் தரை இறங்க முடியாததால் வானிலேயே தொடர்ந்து வட்டமடித்து கொண்டு இருந்தன. காலை 8.45 மணிக்கு வானிலை சீரானதும் வானில் வட்டமடித்த 4 விமானங்களும் ஒன்றின் பின் ஒன்றாக தரை இறங்கின. திருப்பி அனுப்பப்பட்ட 3 விமானங்களும் பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்டு சென்னையில் தாமதமாக தரை இறங்கியது.