இந்நிலையில் வீடுகள் முற்றிலுமாக மேற்கூரை சேதமடைந்து வெறும் கம்பிகள் மட்டுமே இருந்து வருகிறது. இதனால் மழைக் காலங்களில் மேற்கூரை பெயர்ந்து மேலே விழுவதும், தண்ணீர் கசிந்து வருவதால், வீடுகளில் படுக்க முடியாத நிலையில் மக்கள் அச்சமடைந்து வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் இருளர் இன மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக வீடுகளை புதுப்பிக்கக் கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு, நமது ஏபிபி நாடு இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து நமது செய்தி எதிரொலியாக இருளப்பட்டி இருளர் குடியிருப்பு பகுதியில் இன்று பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்தப் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பீரங்கி நகர், இந்திரா நகர் இருளர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் முழுவதுமாகவே சேதமடைந்துள்ளது.