உலகம் முழுவதும் விவாகரத்துகள் தினந்தோறும் நடந்துகொண்டே இருந்தாலும் பிரபலங்கள் செய்யும் விவாகரத்துகளே அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறுகின்றன. இதனாலேயே பிரபலங்களுக்கிடையே அதிக அளவில் மண முறிவுகள் நடப்பதாகக் கருதப்படுகின்றன. இதில் எது உண்மை, அதற்கு என்ன காரணம்? 


இதுகுறித்து மருத்துவ உளவியலாளர் வந்தனா 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் பேசினார். 


''பிரபலங்களுக்கோ, சாதாரண மனிதர்களுக்கோ விவாகரத்து என்பது இப்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் பிரபலங்கள் குறித்த செய்திகள் பலரையும் சென்றடைவதால், அங்கு மட்டுமே அதிகமாக விவாகரத்துகள் நடப்பதுபோன்ற தோற்றம் ஏற்படுகிறது. எனினும் பிரபலங்களுக்கு இடையே விவாகரத்து என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 


பொதுவாக மண முறிவு என்பது இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே நடப்பது. இதற்குக் குறிப்பிட்டு ஒரேயொரு காரணம் இருக்காது. உளவியல்பூர்வமாகப் பல காரணிகள் ஒன்றுசேர்ந்திருக்கும். 


 



மருத்துவ உளவியலாளர் வந்தனா


ஒரே நாளில் நடந்திருக்காது


தற்கொலையைப் போல விவாகரத்து முடிவுகளும் பல நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தங்களின் விளைவாகவே எடுக்கப்படுகின்றன. தனுஷ்- ஐஸ்வர்யா இடையே என்ன பிரச்சினை என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அவர்களுக்கான விவாகரத்து அறிவிப்பு ஒரு நாளில் ஏற்பட்ட சண்டையால் முடிவு செய்யப்பட்டிருக்காது.


இருவருக்கும் இடையே ரஜினிகாந்த், லதா உள்ளிட்ட பெற்றோர்களும் நண்பர்களும் உறவினர்களும் பேசியிருக்கலாம். ஆலோசனை அளித்திருக்கலாம். உளவியல் நிபுணரைக் கூடப் பார்த்திருக்கலாம். எனினும் அது எந்த அளவு அளிக்கப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை. 


விட்டுக்கொடுக்கும் தன்மை 


பிரபலங்களும் மனிதர்கள்தான். என்றாலும், அதனாலேயே அவர்களிடத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை சற்றே குறைவாக இருக்கலாம். திரைத் துறையில் இருப்பதாலேயே தனுஷும் ஐஸ்வர்யாவும் அவர்களுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தள்ளிப் போட்டிருக்கலாம். இதற்கு சமூக அந்தஸ்துகூட காரணமாக இருந்திருக்கலாம். 




அதேபோலப் பிரபலங்கள் படித்தவர்களாக இருப்பதாலும் பொருளாதார அளவில் பெரும்பாலும் தன்னிறைவுடன் இருப்பதாலும், விவாகரத்துக்குப் பிறகான பொருளாதார வாழ்க்கை குறித்துப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. இதனால் பொருளாதார மீட்சி, அவர்களின் விவாகரத்துக்குத் தடையாக இருப்பதில்லை.


போதைப் பழக்கம், திருமணம் தாண்டிய உறவுகள் 


குடிப்பழக்கம், போதைப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விவாகரத்துக்குப் பின்னணியில் இருக்கின்றன. திருமணம் தாண்டிய உறவுகளும் இதற்கு முக்கியக் காரணம். அவற்றின் தீவிரத்தன்மை மட்டும் நபருக்கு நபர் வேறுபடும். இவை அனைத்துமே மனநலத்துடன் தொடர்புடையவை. 


திரைப் பிரபலங்களின் விவாகரத்துக்கு அவர்களின் துறையே முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். துணையுடன் சரியாக நேரம் செலவிடாதது, அதற்கான காரணத்தைத் தெளிவாகத் தன் துணையிடம் தெரிவிக்காமல் இருப்பது, பிற நபர்களுடன் வேலை காரணமாகவோ, தனிப்பட்ட ரீதியிலோ நெருங்கிய தொடர்புடன் இருப்பது, முரணான வேலை நேரங்கள் போன்றவை இதற்கான காரணிகளாக இருந்திருக்கலாம். உணர்வுப்பூர்வமாக நேரம் செலவிடாமல் இருந்திருக்கலாம்.



இவையெல்லாம் தெரிந்துதானே திருமணங்கள் நடக்கின்றன?


பிரபலங்களின் வேலை சூழல், அதற்கான தேவை ஆகியவற்றைத் தெரிந்துகொண்டுதான் பெரும்பாலான திருமணங்கள் நடக்கின்றன. அதேபோல அத்தகைய திருமணங்கள் அனைத்தும் விவாகரத்தில் முடிவதில்லையே. இதில் தனிப்பட்ட நபர்களின் ஆளுமைகள்/ குணநலன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 


வேலை காரணமாக ஒருவரால் கணவன்/ மனைவியிடமோ குழந்தைகளிடமோ முழுமையாக நேரம் செலவிட முடியாமல் போகலாம். அதை அவர்களிடம் தெளிவாகப் புரியவைக்க வேண்டியது அவசியம். 'என்னுடைய வேலை இப்படித்தான்'. 'குறிப்பிட்ட சமயத்தில்தான் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியும்!' என்று முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதிலும் பிரச்சினைகள் வரும்போது பேசித் தீர்க்க வேண்டும். இதைச் செய்யாமல் தவறும் நேரங்களில் விவாகரத்துகள் தீர்மானிக்கப்படுகின்றன.


முறிவுக்கான முதல் புள்ளி 


நான் ஒரு பிரபலம், என்னுடைய இணை ஒரு பிரபலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒருவர் மிகவும் சென்சிட்டிவானவர் என்றால், இன்னொருவர் அனுசரித்துச் செல்பவராக இருந்தால், குடும்ப வாழ்க்கை சீராகச் செல்லும். ஒருகட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல், அவர்களால் விட்டுக்கொடுக்காமல் போகும்போது, முறிவுக்கான முதல் புள்ளி வைக்கப்படுகிறது. 




முன்பெல்லாம் திருமணமானவர்களிடையே ஏற்படும் பிரச்சினைகள், பெற்றோர், உறவினர்களின் ஆலோசனை, பொருளாதாரக் காரணிகள், சமூக அந்தஸ்து ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, பெரும்பாலும் தற்காலிகமாகத் தீர்த்து வைக்கப்பட்டன. எனினும் இந்தப் போக்கு தற்போது மாறி வருகிறது. மேற்குறிப்பிட்டவற்றைத் தாண்டி, விவாகரத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 


இவற்றுக்கு உளவியல் ஆலோசனைகள், திருமணப் பிரச்சினைகள் சார்ந்த சிகிச்சை (marital therapy), குடும்ப நலப் பிரச்சினைகள் (family therapy) தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.


விவாகரத்து அசிங்கமானதல்ல


சாதாரண மனிதர்களைப் போல பிரபலங்களுக்கும் விவாகரத்து பொதுவானதாக மாறிவிட்டது. அது ஒழுக்கமில்லாத, அசிங்கமான ஒன்றில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையே புரிதல் இல்லாமல் அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், விவாகரத்து முடிவு அவர்களுக்குத் தேவையானதாக இருக்கிறது.


இதில் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பார்த்து, முடிவெடுக்க வேண்டியது அவசியம். விவாகரத்து மட்டுமே ஒரே தீர்வு என்னும் சூழலில், குழந்தைகளுக்கும் சேர்ந்து உளவியல் ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்''.


இவ்வாறு மருத்துவர் வந்தனா தெரிவித்தார். 


பிரபலமோ, சாதாரண மனிதர்களோ தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருவதே பெருகும் விவாகரத்துக்கு முக்கியக் காரணமாகி விடுகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்ததால், பெரியவர்களின் துணையோ ஆலோசனையோ இல்லாமல் வாழ்வதும் ஒரு காரணம்.


அதே சமயம் விவாகரத்து என்பது விருப்பமில்லாத துணையைச் சகித்துக்கொண்டு, அழுத்தத்துடன் வாழும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழும் உரிமையை அளிப்பதை மறுக்க முடியாது.