ஆவின் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை ரூ. 10 உயர்ந்து இன்றுமுதல் ரூ. 220க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 210க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்றுமுதல் ரூ. 10 உயர்த்தப்பட்டு ரூ. 220க்கு விற்பனையாகிறது. 


இந்த திடீர் விலையேற்றதால் டீக்கடை மற்றும் உணவகங்களில் டீ மற்றும் காபி போன்றவற்றின் விலை விரைவில் 2 ரூபாய் வரை உயரலாம் எனவும், பிங்க் நிறத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 


திடீர் விலையேற்றம் ஏன் என்பது குறித்து ஆவின் நிர்வாகம் இன்று விளக்கமளித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு என்று ஊடகங்கள் மூலமாக செய்தி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலமாக சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்ற பச்சை நிற பால் பாக்கெட் பொது மக்களுக்கு ஒரு லிட்டர் ரூபாய் 44 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் ஐந்து லிட்டர் பால் ரூபாய் 210க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே வணிக நிறுவனத்திற்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்பொழுது ரூபாய் 210(42*5*210)லிருந்து ரூபாய் 220 (44*5=220)ஆக மாற்றப்பட்டுள்ளது.


இதனை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தி விட்டதாக தெரிவித்துள்ளது. உண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அதே விலையை வணிக பயன்பாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கவே வணிக நிறுவனங்களுக்கான விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.