சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். குறிப்பாக சேலம் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடிப் பண்டிகை 18 பட்டிக்கும் தலைமை மாரியம்மன் திகழ்ந்து வருகிறது.


ஆடி மாதம் முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகையில் தொடங்கி, ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு பூச்சாட்டு விழா, மூன்றாவது வாரம் கம்பம் நடுதல், நான்காவது வாரம் பல்வேறு கோயில்களில் அம்மனுக்கு பொதுமக்கள் நேர்த்தி கடன் செலுத்தும் விழா என மிகச் சிறப்பாக நடைபெறும். 



ஆடிப் பண்டிகை:


கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் உருளுதண்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த எட்டு ஆண்டுகளாக உருளுகண்டம் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு கோவில் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் எட்டு ஆண்டுகள் காத்திருந்த பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.


மேலும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு ஒட்டுமொத்த சேலம் மக்களும் கோட்டை மாரியம்மன் கோவிலில் திரள்வார்கள் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.


திருவிழா நேரங்களில் திருடர்கள் அதிகம் நடமாட வாய்ப்புள்ளதோல் ஒலிபெருக்கி மூலம் தொடர்ச்சியாக பக்தர்களுக்கு தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தமாறு கூறினார். கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் முழுவதும் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு முதல் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட உள்ளதால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



உள்ளூர் விடுமுறை:


கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் ஆடி பண்டிகையை முன்னிட்டு 07.08.2024 புதன்கிழமை (நாளை) உள்ளூர் விடுமுறை என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக 31.08.2024 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகின்ற சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.


போக்குவரத்து மாற்றம்:


இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி பட்ட கோவில், சின்ன கடைவீதி, அக்ரஹாரம், சத்தியம் கார்னர், கன்னிகா பரமேஸ்வரி கோவில், கமலா மருத்துவமனை, அண்ணா நகர், ஹவுசிங் போர்டு மற்றும் திருவள்ளுவர் சிலை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.