வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாய்கள் இஸ்லாமியர்களின் கல்வி செலவு உள்ளிட்டவைகளுக்கு பயபடுத்தப்பட்டு வருகிறது. இதற்கு என்று வக்பு வாரிய சட்டம் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது புது விதிகளை வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு புகுத்தியுள்ளது.
இந்த புதிய திருத்தத்தில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் எனவும் இஸ்லாமிய பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது எனவும் வாரிய அதிகாரியத்தை ஒழுங்குபடுத்துவது எனவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம்
மத்திய அமைச்சர் தாக்கல் செய்த இந்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசும்போது, "சிறுபான்மை மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, வக்பு நோக்கத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத் திருத்தத்தில் உள்ளன. எனவே இதனை நாம் எதிர்க்க வேண்டும்.
அரசின் தலையீட்டை அதிகரிப்பதா
வக்ஃபு சட்டமானது 1954-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய ஒன்றிய பா.ஐ.க. கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரைவினைக் கடந்த 8-8-2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்ஃபு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தங்கள் இருந்ததால் அதனை தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.
எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள். இந்தச் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வக்ஃபு சட்டத்தைத் திருத்துவததன் மூலமாக ஏற்படும் மோசமான விளைவுகள் சிலவற்றை இம்மான்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
சுயாட்சியைப் பாதிக்கும்
* வக்ஃபு சட்டத்தை ஒன்றிய அரசு திருத்த நினைக்கிறது. இதன் மூலம் மத்திய வக்ஃபு கவுன்சில் மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்ஃபு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும்.
* அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்ஃபு சொத்து, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்ஃபு சொத்தாகக் கருதப்படாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.
* “ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்ஃபு அறிவிக்க முடியும்" என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்ஃபுகளைச் செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
* இசுலாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்குத் தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
* மாநில வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்ஃபு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென்று இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும் !
* வக்ஃபு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது வக்ஃபு வாரியத்தின் சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-இன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவது ஆகும்.
* "வக்ஃபு பயனர்" என்ற பிரிவை நீக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.
நீண்டகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்ஃபு சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது.
* “லிமிட்டேஷன் ஆக்ட்” என்று சொல்லப்படும் காலவரையறைச் சட்டம் வக்ஃபு சொத்துகளுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.
* அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள் இனி வக்ஃபு எனக் கருதப்பட மாட்டாது. இந்தப் பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை ஒன்றிய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை.
இசுலாமிய மக்களை வஞ்சிக்கும் இச்சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம்".
இவ்வாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.