சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களை (குற்றப்பத்திரிகை, கைது குறிப்பானை உள்ளிட்ட) முழுமையாக வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சிறையில் செந்தில் பாலாஜி:


அமைச்சர் செந்தில் பாலாஜியை பண மோசடி வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கொடுக்கப்பட்டிருந்த 5 நாட்கள் விசாரணை காவல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த சூழலில், காவலை நீட்டிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அதேபோல, 120 பக்க குற்றப்பத்திரிகையும் 3,200 பக்க ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அனைத்து ஆவணங்களும் இரும்பு பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை காவலை நீட்டிக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சென்னை முதன்மை  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. வழக்கில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த வாரத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமலாக்கத்துறை:


சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 14 தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யபட்டார். அதனை தொடர்ந்து அவரது மனைவி மேகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்து. சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்யவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.


உச்ச நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி இரவு முதல் அமலாக்க துறை செந்தில் பாலாஜியை தன்னுடைய காவலில் எடுத்து விசாரித்தது. அமலாக்கதுறை காவல் முடிந்த செந்தில் பாலாஜக்கு நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 25 தேதி வரை நீட்டித்து கடந்த 12  நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.


இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை 3 ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமான குற்றப்பத்திரிகையை அமலாக்கதுறை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து அமலாக்கதுறை வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் தர கோரி அவரின் வழக்கறிஞர் தரப்பில் நீதிபதி அல்லியிடம் முறையீடு செய்தார். அமலாக்கத்துறை தரப்பிற்கு மனு குறித்த தகவலை தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.