மீனாட்சி அம்மன் கோயில் விழாவின் 8-ஆம் நாளான பட்டாபிஷேகம் அன்று செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.


அப்போது, கோவிலினுள் இந்துக்கள் அனைவரும்தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்துதானே? கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக்கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது?   என நீதிபதி கேள்வி எழுப்பினார்.


அப்போது அரசு தரப்பில்  கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி இதுபோன்ற மனுவை ஏற்கனவே உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட  அமர்வு விசாரணை செய்து தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.


கோயில் திருவிழா ஆரம்பித்தபின் கடைசி நேரத்தில் இதுபோன்று மனு தொடர்வது ஏற்கத்தக்கது அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


வழக்கு பின்னணி:


மதுரை சேர்ந்த தினகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின் ஒவ்வொரு நிகழ்விலும், ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படும். விழாவின் 8ஆம் நாளான பட்டாபிஷேகம் அன்று, செங்கோல்  மீனாட்சியம்மனின் கைகளில் ஒப்புவிக்கப்படும்.


அந்த செங்கோலை உரிய அறங்காவலர் குழு தலைவர்  பெற்றுக்கொள்வார்.  ஆகம விதியின்படி திருமணம் ஆகாதவரோ, கணவன் அல்லது மனைவியை இழந்தவரோ செங்கோலை பெற்றுக்கொள்ள இயலாது.


தற்போது மீனாட்சியம்மன் கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல்ராஜன். அவர் கணவரை இழந்தவர் என்பதால்  கோயிலின் விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. வேறு  தகுதியான நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிடவேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு  நீதிபதி சரவணன், முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதி,  விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ள கடைசி நேரத்தில், வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்? இந்தக் காலத்திலும் இதுபோல கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.