சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது.  அதில்,



  • Electronic Enforcement Device-ஐ பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல், விபத்தை தவிர்த்தல், விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தயாராகிறது அரசு.

  • போக்குவரத்து காவலர்கள், தங்கள் உடலில் கேமராவை பொருத்தி வாகன போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும்.

  • போக்குவரத்து காவல் வாகனங்களில் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமரா மூலம் போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும்

  • மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், முக்கிய நகரங்கள், முக்கிய சந்திப்புகளில் கேமராக்களை பொருத்தி போக்குவரத்தைக் கண்காணிக்க வேண்டும்

  • தானியங்கி வண்டி எண் அறியும் தொழில்நுட்பம், வாகனங்களில் உள்ள எடையை அறியும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திட வேண்டும்

  • அதிக வேகம், ஹெல்மெட்/ சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், சிக்னல்களை மீறிச்செல்லுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லுதல், இதர வாகனங்களை தாறுமாறாக முந்திச் செல்லுதல், ஆம்புலன்ஸூக்கு வழிவிடாமல் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமீறும் வாகனங்கள் & ஓட்டுநர்களுக்கு 15 நாட்களுக்குள்ளாக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே அபராதம் விதிக்க புதிய நடைமுறை

  • தேதி, நேரம், இடம் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதத்தொகையை செலுத்திக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் துணை விதிகளின்படி: இடம், தேதி மற்றும் நேரத்திற்கான மின்னணு முத்திரையுடன் கூடிய Electronic Enforcement Device காட்சிகள், பின்வரும் குற்றங்களுக்கு சலான் வழங்க பயன்படுத்தப்படலாம், அதாவது:-


(i) பரிந்துரைக்கப்பட்ட வேக வரம்பை மீறி கூடுதல் வேகத்துடன் வாகனத்தை இயக்குவது. (பிரிவு 112 & 183)


(ii) அங்கீகரிக்கப்படாத இடத்தில் வாகனத்தை நிறுத்துதல் (பிரிவு 122);


(iii) ஓட்டுநர்கள் மற்றும் பிலியன் ரைடர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது (பிரிவு 128);


(iv) தலைக்கவசம் அணியாதது (பிரிவு 129);


(v) சிக்னலில் வாகனத்தை நிறுத்தாமல் செல்வது, (பிரிவு 184);


(vi) அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் வாகனம் இயக்குவது (பிரிவு 194ன் துணைப் பிரிவு (1));


(vii) பாதுகாப்பு பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் (பிரிவு 194B); ஆகியவை அடங்கும். 


PM Modi: ரோஜ்கார் மேளா திட்டம்.. மீண்டும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி..!