கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க்கில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டிற்கு வருகிறது.


காவிரியின் நடுவே மேகதாதவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக எல்லையான ராசிமணலில் அணை கட்டுவதற்கு கோரிக்கை எழுந்துள்ளது.


காமராஜரின் கனவு திட்டம்:


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் பற்றாக்குறை காரணமாக 1961 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் ராசிமணல் அணை திட்டம். அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது.


இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ராசிமணலில் அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். பின்னர் தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் இன்று வரை ராசிமணலில் அணை கட்ட எந்த அரசும் முன் வரவில்லை.



ராசிமணல் அணை: 


கர்நாடகாவில் தொடங்கும் காவிரி ஆறு தமிழகத்தில் 800க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இதில் மேகதாது முதல் ஒகேனக்கல் இடையிலான 60 கிலோமீட்டர் தூரம் இடது கரை தமிழகத்திலும், வலது கரை கர்நாடகாவிலும் காவிரி ஆறு பாய்ந்து ஓடுகிறது. ராசிமணல் பகுதியில் தமிழக அரசு அணை கட்டினால் குறைந்த செலவில் 50 முதல் 100 டிஎம்சி வரையிலான தண்ணீர் தேக்கி வைக்க முடியும். குறிப்பாக மேகதாதவிலிருந்து ராசிமணல் வரை உள்ள 60 கிலோ மீட்டர்களில் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதினால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.


அணையினால் ஏற்படும் நன்மைகள்:


மேட்டூர் அணையில் நீர் குறையும் போது ராசிமணலில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் தண்ணீருக்கு ஏங்க வேண்டிய அவசியம் இருக்காது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு உரிய நேரத்தில் குருவை, சம்பா சாகுபடி செய்வதற்கு போதுமான தண்ணீர் திறக்கப்படும்.


மேலும், ராசிமணல் அணையில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களுக்கும் மின்சார தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோன்று இரண்டு மாநிலத்திலும் நிலத்தடி நீர் பெருகுவதோடு, காட்டு விலங்குகள் தண்ணீருக்காக கிராமப் பகுதிகளுக்கு வருவது தடுக்கப்படும்.



தமிழக அரசுக்கு திட்டம் இல்லை: 


யானை ராஜேந்திரன் என்பவர் ராசிமணலில் அணை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதற்குப் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதில் அளித்த அப்போதைய தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் இறையன்பு, ராசிமணலில் அணை கட்டுவதற்கு தமிழக அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை.


ஒகேனக்கல், ராசிமணல், மேகதாது உள்ளிட்ட இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் கர்நாடகா அரசு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தது. 


விவசாயிகள் கோரிக்கை: 


தேர்தல் காலங்களில் அனைத்துக் கட்சிகளும் ராசிமணலில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் எந்த எம்எல்ஏ, எம்பியும் இதுவரை அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. ராசிமணலில் அணை கட்டுவதினால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா என இரண்டு மாநிலங்களும் அணையை பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே உடனடியாக ராசிமணலில் அணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். 


கர்நாடகா அரசு தமிழகத்திற்கு போதுமான நீர் வழங்கப்படாத சூழ்நிலையில் தற்போது ராசிமணலில் அணைக்கட்டும் திட்டத்திற்கு கோரிக்கையும், தேவையும் அதிகரித்துள்ளது. எனவே தமிழக அரசு மறுபரிசீலனை செய்து ராசிமணலில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.