போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி பண் மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரது வீட்டில் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  அங்கு அவருக்கு ஜூன் 21 ஆம் தேதி காலை 5 மணிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

  


இந்நிலையில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு நீதிபதிகளின் திர்ப்பு மாறுபடவே மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் அமர்வுக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது.


அப்போது, “ கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.  தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் கஸ்ட்டடியில் எடுக்க வேண்டியது அவசியம்” என கூறியுள்ளார்.  நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறிய காரணத்திலும் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் காவலில் எடுக்கலாம் எனவும், அதேபோல் சிகிச்சை நாட்களை நீதிமன்றம் நாட்களாக கருத முடியாது” என குறிப்பிட்டு தீர்ப்பை வழங்கினார். மேலும் எத்தனை நாட்கள் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.  இதனிடையே நெஞ்சு வலி காரணமாக அறுவை சிகிச்சை நடந்து தொடர் சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 18 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.


மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயனின் தீர்ப்பை அடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு அமர்வில விசாரணைக்கு வருகிறது. நீதிபதி பரத சக்கரவர்த்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருப்பதால் இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜியை எத்தனை நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து இரண்டு நீதிபதிகளும் முடிவு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 


இது ஒருபுறம் இருக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.