ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் மீது SC/ST ACT, 420 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கைதாக வாய்ப்பு எனக் கூறப்படுகிறது.




தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2021-ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்ற பெண் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக உள்ளார். 


இத்தோளப்பள்ளி ஊராட்சி இம்முறை ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு (ஆண்,பெண்) ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைவராக வெற்றி பெற்றுள்ள கல்பனா சுரேஷ் என்பவர் மாற்று சமுகத்தை சேர்ந்தவர் என்றும் தேர்தல் வேட்புமனுவில் போலியான சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாகவும் தோளப்பள்ளி ஊராட்சியில் அதே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தார்.


மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் விழிக்கண் குழு தொடர் விசாரணை நடத்தியதில் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் முறைகேடாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரது செக் பவர் ரத்து செய்யப்பட்டு, விழிக்கண் குழு அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இந்நிலையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் புகார்தாரர் பாக்யராஜ் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலி சான்றிதழ் அளித்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கல்பனா சுரேஷ் மீது 420,SC/ST ACT உட்பட 465, 466, 468, 471 என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற கல்பனா சுரேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.