கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும், உயிரிழப்பு அதிகரிக்குமோ என அஞ்சப்படுகிறது. 


பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டாமாகின. 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 


பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதால் தீயணைக்கும் வீரர்கள் தீயணைக்கும் பணி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு, எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். 


பட்டாசு கடை வெடி விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி  பட்டாசு கடை உரிமையாளர் ரவி அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ் மற்றும் ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரி, ஹோட்டல் அருகே வெல்டிங் ஷாப் வைத்திருந்த இம்ரான், இப்ராகிம், தண்ணீர் கேன் கடையில் பணியாற்றிய சரசு மற்றும் ஜேம்ஸ் ஆகிய 9 பேர் உயிரிழந்துள்ளனர்.


கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்‌. மேலும் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் முழுவதுமாக மீட்பு பணிகள் முடிந்த பிறகுதான், முழு விபரம் தெரியவரும். இந்த பட்டாசு கடை விபத்துக்கான தகவல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மீட்புப்பணியில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர் தீயணைப்பு துறையினர்,  வருவாய்த்துறை ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு: 


இதுகுறித்து வெளியான அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோடு, போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று (29-7-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களை அனுப்பிவைத்துள்ளேன்.





 

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என வெளியிடப்பட்டு இருந்தது.