கோவையை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி பட்டுப்புடவை வாங்க உண்டியலில் சேமித்த ஆயிரத்து 516 ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி AlcNo.117201000000070 IFSC-IOBA0001172 சென்னை கிளையில் செலுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதன் பேரில் பல்வேறு தரப்பினரும் தங்களான நிதியுதவியை அளித்து வருகின்றனர்.  இந்நிலையில் கோவையை சேர்ந்தா 7 வயது மாணவி ஒருவர் பட்டுப்புடவை வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.




கோவை காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் டாட்டாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது ஏழு வயது மகள் பிரணவிகா, தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை பிரணவிகா தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துள்ளார். இதையடுத்து பிரணவிகா பட்டு புடவை வாங்க உண்டியலில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது தந்தையுடன் ஐஓபி ஆர்.எஸ் புரம் கிளை வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி ஊழியர்கள் முன்பு உண்டியலை உடைத்து அதில் சில்லறை காசுகளாகவும், பணமாக சேர்த்து வைத்திருந்த ஆயிரத்து 516 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.




இது குறித்து பிரணவிகாவின் தந்தை பழனிச்சாமி கூறுகையில், ”நேற்று தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த போது முதலமைச்சர் நிவாரண நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த செய்தியை குடும்பத்துடன் பார்த்தோம். இது குறித்து பிரணவிகா என்னிடம் ஆர்வமாக கேட்டறிந்தார். இதையடுத்து நாங்கள் அவ்வப்போது கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேர்த்து வைக்கும் பழக்கம் கொண்ட பிரணவிகா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டுமென தெரிவித்தார். இதையடுத்து பிரணவிகாவை வங்கிக்கு அழைத்து சென்று வங்கி ஊழியர்கள் முன் உண்டியல் உடைத்து சேமிப்பு பணமான ஆயிரத்து 516 ரூபாயை வங்கியில் செலுத்தினோம்” என்றார்




சேமிப்பு பழக்கம் கொண்ட பிரணவிகா தனது தங்கைக்கும் தனக்கும் பட்டு புடவை வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். "கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது நான் 500 ரூபாயை முதலமைச்சரின் நிவரண நிதிக்கு அனுப்பி வைத்தேன். அதற்கான பாராட்டு சான்றிதழ் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்தது. அதனை அப்போது பிரணவிகாவிடம் காண்பித்து மகிழ்ந்தேன். அதுவும் நிவாரண நிதி வழங்க ஒரு உந்துகோலாக இருந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.