வீட்டு மனைப்பட்டா பெயர் திருத்தம் செய்து  தராமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுவர், சிறுமியுடன் 5 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.




கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கருப்பாயி. இவருக்கு மகாமுனி என்கின்ற கணவரும், மகன், மருமகள், பேரக் குழந்தைகள் உள்ளனர். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராமத்தில் வசித்து வருவதாகவும், கடந்த 1993ம் ஆண்டு இவர்களது பெயரில் குளித்தலை வட்டாட்சியர் பட்டா வழங்கியுள்ளார். கூலி வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் அந்த இடத்திற்கு பட்டா வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.




மீண்டும் அங்கு வந்த இவர்கள் தங்களது இடத்தில் பல லட்சம் செலவு செய்து புதிதாக வீடு கட்டியுள்ளனர். பக்கத்து வீட்டுக்காரரின் வாரிசுகள் அந்த இடம் தனது அத்தை பெயரில் பட்டா இருப்பதாக கூறி பிரச்சினை செய்வதாக புகார் எழுந்துள்ளது. 




இது தொடர்பாக விசாரணை செய்து தங்கள் பெயரில் பட்டா வழங்கக் கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெயர் மாற்றம் செய்து தராமல் அலைக்கழித்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி கருப்பாயி, அவரது கணவர், மருமகள் மற்றும் பேரன், பேத்தியுடன் உடலில் மண்ணென்னை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். தகவலறிந்து அங்கு வந்த குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் கெளசல்யா, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு வார காலத்தில் பெயர் மாற்றம் செய்து பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். அப்போது கோட்டாட்சியர் காலில் பெண்மணி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.கரூர் மாநகரில் 100க்கும் தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகளை அடுக்குமாடிகளாக மாற்றி தருவதாக வாய் மூலம் வாக்குறுதி கொடுத்து வீடுகளை காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் கூறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில் அமைந்துள்ள கே.எம்.சி காலனி பகுதியில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அந்த இடத்திற்கு பட்டா கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து அந்த இடத்தை இடித்து அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்க போவதாக வாய் மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், வீடுகளை காலி செய்துவிட்டு மாற்று இடத்திற்கு செல்ல கூறியுள்ளனர். மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வரும் தங்களுக்கு, பலர் வாடகைக்கு வீடு தர மறுத்து தீண்டாமையை கடைபிடிப்பதாக புகார் தெரிவிக்கும் அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளனர்.மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்பு கொளந்தானூர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் தங்கி இருந்து அடுக்குமாடிகளை இடித்து அகற்றிய நிலையில், தற்போது வரை கட்டுமான பணி தொடங்காததால் அவர்கள் வெளியூரில் இருந்து வேலைக்கு வருவதாகவும், குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப சிரமத்தில் இருப்பதாகவும் தெரிவித்து, தங்களுக்கு மாற்று இடத்தில் தற்காலிகமாக குடியிருக்க வீடும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்குமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.