கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பொன்னுரங்கன். இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். பொன்னுரங்கன் அவரது மகன்கள் உடன் இணைந்து அதே ஊரில் விவசாய உரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.


இந்நிலையில் திருமணமான அவரது மகள் திரவியம் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் சரியில்லாமல் தந்தை வீட்டில் பொன்னுரங்கத்துடன் வசித்து வருகிறார்.


இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திரவியம் தனது குழந்தைகள் ரியாஷினி ( 5) மற்றும் விஜயகுமாரியுடன் ( 3) வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது திரவியம் வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் உடல் முழுவதும் ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் தீப்பற்றி எரிந்த திரவியம், தனது குழந்தைகளுடன்  இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னுரங்கன் காப்பாற்ற முயற்சி செய்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பொன்னுரங்கன் அதே இடத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.