இந்தியாவிலேயே அதிக தூரம் சென்று கடலில் தங்கி மீன்பிடிப்பு தொழில் ஈடுபடும் மீனவர் குமரி மாவட்டத்தை சேர்ந்த தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தான் ,அதிலும் இவர்கள் ஒருமுறை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றால் சுமார் 30 முதல் 60 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்க கூடிய திறன் கொண்டவர்கள் இவர்கள் பெரும்பாலானோர் குமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டனம், கேரளாவின் கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க செல்வது வழக்கம் அப்படி மீன்பிடிக்க செல்லும்போது சர்வ சாதாரணமாக 400 முதல் 600 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடி தொழில் செய்வார்கள்.

 



 

இதனால் பல முறை அண்டை நாடுகளில் உள்ள கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடிததாக கைது செய்யப்படும் நிலையில் கடந்த 22.2.2022 அன்று கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை, சின்னத்துறையை சார்ந்த குக்ளின், சுனில், ஜெனிஷ் ஆகியோருக்கு சொந்தமான இன்பேன்ட் ஜீஸஸ், டொணோ, ஸ்நாபக அருளப்பர் என்ற படகுகளில் முறையே 11, 10, 12 என 33 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். பலத்த காற்று வீசியதால் திசைமாறி சென்றதாக கூறும் இம்மீனவர்களை கடந்த 7ஆம் தேதியன்று மடகாஸ்கர் அருகே உள்ள சீஷெல்ஸ் கடற்படை அதிகாரிகள் பிடித்து கேப்டன்களை காவல்நிலையத்திலும் மற்ற 30 மீனவர்களை தங்களது விசைப்படகுகளிலும் தங்க வைத்துள்ளனர். இம்மீனவர்களின் உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவர்களது படகுகளையும் இம்மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அரசுக்கும் தமிழக, கேரள அரசுகளுக்கும் சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை ( INFIDET) வேண்டுகோள் விடுத்துள்ளது.