வாக்காளர் பட்டியலில் 17.69 லட்சம் பேர் நீக்கப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.


வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். டிசம்பர் 8 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி பேர் எனவும் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் குறைந்தபட்சமாக 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்"  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் 17.69 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இறந்த வாக்காளர்கள் 2.44 லட்சம் பேர் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள் 15.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் 31, 2023க்குள் இப்பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், www.nvsp.in, voters portal என்ற இணையதளத்தைப் பயன்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.


இந்தியாவில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ளது. பேரூராட்சி,ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களிலும் 1 வார்டில் இருக்கும் வாக்காளரின் பெயர் 6, 7 என இரண்டிற்கும் மேற்பட்ட வார்டுகளில் இருக்கும்.


வாக்களிக்கச் செல்லும் போது தான் நாம் எதற்கு வாக்களிக்க வேண்டும்? என்ற குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்படுகிறது. இதோடு அரசியல் கட்சியினரும் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு போலி வாக்குகளை செலுத்துகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து தொடங்கியது. இப்பணிகளை வருகின்ற மார்ச் 31, 2023க்குள் முடிக்கும் வகையில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டது. 


இதனை தொடர்ந்து மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டல், voter helpline app என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.போலி வாக்காளர்களைக் கண்டறிய மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ள ஒரு வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மேற்க்கொண்டது.