பெண் பிள்ளைகள் மீதான பாலியல் வன்கொடுமைப் புகார்கள் சென்னையில் அண்மைக்காலமாக அதுவும் கொரோனா பேரிடர் காலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கொரட்டூரில் அண்மையில் 15 வயது சிறுமிக்கு தாயின் காதலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை கொரட்டூர் ரயில்வே ரோட்டைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவருடன் திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். நரேஷ் குமாரும் பிரியங்காவும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே மூன்று வருடத்துக்கு முன்பு பிரியங்காவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் இணைந்து வாழத் தொடங்கினார்கள். பிரியங்காவின் 15 வயது மகளும் இவர்களுடன் தான் வசித்து வருகிறார். 


இதற்கிடையே நேற்று முன் தினம் இரவு சந்தீப் தனியாக இருந்த பிரியங்காவின் 15 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்தச் சிறுமி கத்தவும் பிரியங்கா அங்கே  வந்துள்ளார். ஆனால் பிரச்னை என்ன என்பதை அறிந்த பிறகு பிரியங்கா அதுபற்றி போலீஸில் புகார் தெரிவிக்காமல் சந்தீப்புக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் வெளியே தெரிந்ததும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸுக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு அவர் அம்பத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்துப் புகார் செய்துள்ளார். இதனை அடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் சிறுமிக்கு சந்தீப் பாலியல் தொல்லை கொடுத்ததும் அதற்குத்  தாய் பிரியங்கா உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாய் பிரியங்கா மற்றும் அவரது காதலர் சந்தீப் ஆகிய இருவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 


அண்மையில் கடலூர் மாவட்டத்தில் இதே போன்றதொரு சம்பவம் நடந்தஹ்டு இங்கே குறிப்பிடத்தக்கது.கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்து உள்ள மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது பாரூக் (42). இவர் கடந்த சில ஆண்டுகளாக குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் என இரு மகள்கள் உள்ளனர்.


இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் முகமது பாரூக் அவர்களின் மனைவி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து உள்ளார். எனவே, அவரது மகள்கள் இருவரையும் தனது அரவணைப்பில் தந்தையான முகமது பாரூக் வளர்த்து வந்தார். மேலும், முகமது பாரூக் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் வேலைக்கு செல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்து உள்ளார். இந்நிலையில், முகமது பாரூக்கின் இளைய மகளான 15 வயது மகள் நேற்று இரவு கடலூர் அனைத்து மகளிர் காவலநிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார் அதனை கேட்ட அங்கிருந்த காவல் துறையினர் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்த சிறுமி அளித்த புகாரில், தனது தந்தையான முகமது பாரூக் கடந்த ஒரு வருடமாக வீட்டில் இருந்த தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.