ராமேஸ்வரத்தை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக மீனவர்கள் கைது:


நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 4 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  அவர்களிடமிருந்து 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தொடரும் கைது நடவடிக்கைகள்:


கடந்த ஜுன் மாதம் 21ம் தேதி  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 91 விசைப்படகுகளில் 450 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவற்றில், உதயகுமாருக்கு சொந்தமான படகில் உதயகுமார், அவரது மகன்கள் ரவீந்திரன்(40), உலகநாதன்(35), வைத்தியநாதன்(27), அருள்நாதன்(23), முத்து மகன் குமரேசன்(35),  அகிலா என்பவருக்கு சொந்தமான படகில் அவரது கணவர் காளிமுத்து(45), எம்.அர்ஜுனன்(50), எஸ்.குமார்(42), என்.குருமூர்த்தி(27), எம்.அருண்(22) மற்றும் தமிழரசனுக்கு சொந்தமான படகில் தமிழரசன், சி.பாஸ்கர்(40), ஓ.முத்துராஜா(25), டி.அரேன்(20), டி.ஜெகநாத்(35), எஸ்.குமார்(43), ஆகியோர் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளில் இருந்த 17 மீனவர்களையும் கைது செய்ததுடன், அவர்களது விசைப்படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 405 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.  அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அந்தோணி பிரசாத்துக்கு சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த சந்தியா, தேவா, நடராஜன், நாகராஜன், ஜிப்ரா ஆகிய 5 மீனவர்களை கைது செய்தனர்.


நடவடிக்கையும் - விடுதலையும்:


22 மீனவர்களையும் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்று விசாரணைக்குப் பின்னர் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைக்குப் பிறகு 22 தமிழக மீனவர்களும் சில தினங்களுக்கு முன்பு  நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.  முன்னதாக, கடந்த மாதம் 20-ம் தேதி தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் ஜுன் 21-ம் தேதி விடுதலை செய்தனர்.


மீன்பிடி தடைக்காலத்தில் 2 மாதங்களாக தொழிலுக்குச் செல்லாமல், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் படகுகளை பழுது நீக்கி, மீண்டும் தொழிலுக்கு செல்ல தொடங்கியுள்ள இரண்டு மாதங்களிலேயே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது மீனவர்களை அதிர்ச்சியைடைய செய்துள்ளது.