தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய காவல்துறையினர் அவரது சென்னை இல்லத்திற்கு சென்றபோது அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அந்த நேரத்தில், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் தனது வீட்டிலிருந்து அந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
உதயநிதி கைதை வீடியோ எடுத்த சஞ்சீவ்
அப்போது அங்கு கூடியிருந்த சில திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சஞ்சீவ் வீடியோ பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், சஞ்சீவ் தனது வீட்டிலிருந்து காவல்துறையினரின் நடவடிக்கையை பதிவு செய்து கொண்டிருந்ததாகவும், அதை பார்த்த திமுகவினர் அவரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. வாக்குவாதத்தின் போது அங்கு இருந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உதயநிதி கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவரது இல்லம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் அரசியல் பரபரப்பு நிலவி வரும் நிலையில், சஞ்சீவைச் சுற்றிய இந்த சம்பவமும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைது பின்னணி
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை திரிஷாவை குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டதுடன், அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலகினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் விசாரணைக்காக காவல்துறையினர் இன்று சென்னை இல்லத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறார். இந்த கைதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக ஆதரவாளர்களை தமிழ்நாடு அதிரடி படை போலீஸ் கைது செய்துள்ளது.
