சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மேலும் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உலகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.


இதைத் தொடர்ந்து சேலம் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மரக்கன்று நட்டனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியினை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்.


இந்நிகழ்ச்சியில் சேலம் சரக டி ஐ ஜி ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, "உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சேலம் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு புதிதாக கட்டப்பட உள்ள 16 நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டால் இந்தியாவிலேயே சேலம் நீதிமன்றம் முன்னோடியாக திகழ வாய்ப்புகள் உள்ளது என்றும், நீதிமன்றங்கள் முன்பெல்லாம் காகிதத்தால் எழுதுகின்ற வகையில் செயல்பட்டு இருந்தது. தற்போது அதிநவீன தொழில்நுட்பத்தினால் அனைத்து நீதிமன்றங்களிலும் காகிதம் இல்லாமல் செயல்படும் நிலைமை வந்துள்ளது. எனவே அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். 



இவ்வாறு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டிடத்தை கட்டினால் முதன்மை நீதிமன்றமாக திகழும் மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனை பெற்று இளைய வழக்கறிஞர்கள் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். இளைய வழக்கறிஞர்களுக்கு அனுபவம் இருக்காது. எனவே மூத்த வழக்கறிஞர்களிடம் அனுபவங்களை இளைய வழக்கறிஞர்கள் கற்றுக் கொண்டு செயல்பட்டால் அதிக நேரம் செலவிட்டு குறைந்த பணம் சம்பாதிப்பதை விட குறைந்த நேரம் செலவிட்டு அதிக பணம் சம்பாதிக்கலாம். கடினமாக உழைத்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். எப்பொழுதும் வேலை என்று இருக்காமல் குடும்பத்துடனும் நேரம் செலவிட வேண்டும். அப்போது மகிழ்ச்சி ஏற்பட்டு வேலை செய்யும்போது எந்தவித தடங்களும் இல்லாமல் சிறப்பாக பணிகள் செய்திட முடியும்" என்று கூறினார்.