ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ள கோடை விழாவில் தினம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 


இன்றைய நிகழ்ச்சிகள்:


இந்த வகையில், நேற்று சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து மலையேறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் 34 பேர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மாசில்லா ஏற்காட்டை உருவாக்கும் வகையில் இ-மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மிதிவண்டி போட்டியானது சுற்றுச்சூழல் பூங்காவில் தொடங்கி, ஏற்காடு பேருந்து நிலையம், அண்ணா பூங்கா, ஏற்காடு ஏரி வரை சென்று மீண்டும் சுற்றுச்சூழல் பூங்காவில் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து ஏற்காடு மான்போர்ட் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான கால்பந்து போட்டி, பெண்களுக்கான மருந்து பந்து வீசுதல் (Medicine Ball Throw), 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வழிகாட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சுற்றுலாத்துறை மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 



இன்றைய நிகழ்வுகள்:


ஏற்காடு கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் செல்லப் பிராணிகள் கண்காட்சி இன்று நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பூனைகள் மற்றும் அல்சேசன், பொமரேனியன், ஜெர்மன் செப்பார்டு, டாபர்மேன், லேபர்டார், பக், காக்கர் ஸ்பேனில் டேசன்ட் போன்ற வெளிநாட்டு இன நாய்கள் கலந்து கொள்ள உள்ளது. இதேபோன்று ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை, கன்னி போன்ற நாட்டின வகை நாய்களும் கலந்து கொள்ள உள்ளன. இதில் காவல் துறையைச் சார்ந்த செல்லப் பிராணிகளுக்கான கீழ்படிதல் மற்றும் சாகச நிகழ்ச்சி போன்று போட்டிகள் இடம்பெற உள்ளன. இக்கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த செல்லப் பிராணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பல்சுவை நிகழ்ச்சி, சேர்வையாட்டம், சிலம்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.



மலர் கண்காட்சி:


மலர் கண்காட்சியை ஒட்டி அண்ணா பூங்காவில் ஏழு லட்சம் மலர்களைக் கொண்டு காற்றாலை வடிவிலான மலர் அலங்கார வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்களான டால்பின், மீன், முத்துச்சிப்பி, ஆக்டோபஸ் என பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட மலர் அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 


வார இறுதி நாள்:


47வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முடிவடைய உள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதி நாள் என்பதால் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக ஏற்காட்டில் கடும் பணி நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.