ஏற்காட்டில் 49ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. இங்கு 40 வகை மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

Continues below advertisement

ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் 49வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று தொடங்கி வைத்து அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மலர்க்கண்காட்சியை பார்வையிட்டார். நடப்பாண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 30,000 தொட்டிகளில் பால்சம், ஜினியா, சால்வியா. கிரை சாந்தியம், ஜெரேனியம், பேன்சி, பெட்டுனியா, மேரிகோல்ட், ஆஸ்டர், கைலார்டியா, செலோஸியா உள்பட 40 வகை மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

Continues below advertisement

மேலும், 75,000 வண்ண மலர்களால் உழவு மாடுகள், பசுமாடு கன்று குட்டி, ஆடு, மான், முயல், கோழி, சேவல், வாத்து உள்ளிட்ட உருவங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில் 35,000 வண்ண மலர்களைக் கொண்டு டெடிபியர், 15,000 மலர்களைக் கொண்டு புளூட்டோ கார்ட்டூன், 8000 மலர்களால் பிறை நிலவு, 10,000 மலர்களால் விங்கில் ஹார்ட், 25,000 மலர்களால் வரவேற்பு வளைவு, 20000 மலர்களால் பெண் பரதநாட்டியம் ஆடுவது போன்ற உருவங்கள் பூங்காவின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

 

இதனை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து அவற்றின் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.  இந்தக் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் 28ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் 7 நாட்களும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடைபெறுகிறது.